

ஜார்க்கண்டில் உள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக கடந்த 20 மற்றும் 23ம் தேதிகளில் நடைபெற்றது. இதில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 34 இடங்களையும், காங்கிரஸ் 16 இடங்களையும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் 4 இடங்களிலும் வெற்றி பெற்றது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 34 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததை அடுத்து, கவர்னர் சந்தோஷ் காங்வாரை சந்தித்த ஹேமந்த் சோரன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். கவர்னரின் ஒப்புதலை அடுத்து, ஜார்க்கண்டில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் சோரன் இன்று முதல்வராக பதவியேற்று கொண்டார்.
அவருக்கு ஜார்கண்ட் கவர்னர் சந்தோஷ் கங்குவார் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். இந்த நிலையில், ஜார்கண்ட் முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ள ஹேமந்த் சோரனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார் .
இது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தள பதிவில், "ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்ற ஸ்ரீ ஹேமந்த் சோரனுக்கு வாழ்த்துக்கள். இனிவரும் பதவிக்காலத்தில் அவருக்கு வாழ்த்துகள்," என்று குறிப்பிட்டுள்ளார்.