

அமெரிக்காவுடனான போர் பதற்றம் காரணமாக ஈரான் ஹார்முஸ் நீரிணையை மூடியுள்ளதால், இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் கொண்டு வருவதில் சிக்கல் நீடிக்கிறது.
இதனால் பெட்ரோல்-டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கிடையே பெட்ரோல்-டீசல் பயன்பாட்டை குறைக்க பொதுமக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும்.
வாகனங்களில் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் குழுவாக இணைந்து பயணிக்க வேண்டும் என பிரதமர் மோடி சமீபத்தில் வேண்டுகோள்விடுத்து இருந்தார்.
இந்தநிலையில், மோடியின் வேண்டுகோளை ஏற்று, எரிபொருளை பாதுகாக்க ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பெட்ரோல் பங்க்குகளை மூடுவதற்கு இந்திய பெட்ரோலிய டீலர்கள் சங்க செயற்குழு முடிவெடுத்து உள்ளதாகவும், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மராட்டியம், ஆந்திரா, தெலுங்கானா மற்றும் அரியானாவில் இந்த நடைமுறை அமல்படுத்தப்படும் என்றும் ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போன்ற இந்த தகவலை பலரும் பகிர்ந்து வருவதோடு, விமர்சித்தும் கருத்து தெரிவித்தும் வருகின்றனர். இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில் "ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்க்குகள் மூடப்படும் என்று பரவும் தகவல் தவறானது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.