நடுவானில் குலுங்கிய இந்திய விமானம்: அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி மறுத்த பாகிஸ்தான்

டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு இண்டிகோ விமானம் சென்று கொண்டிருந்தது.ஆலங்கட்டி மழையில் சிக்கி குலுங்கிய அந்த விமானம் ஸ்ரீநகரில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
நடுவானில் குலுங்கிய இந்திய விமானம்: அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி மறுத்த பாகிஸ்தான்
Published on

புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் இருந்து நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகருக்கு இண்டிகோ விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் உள்பட 220-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் நடுவானில் பறந்தபோது பலத்த காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழையில் சிக்கி அந்த விமானம் குலுங்கியது. இருப்பினும் அந்த விமானம் ஸ்ரீநகரில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

இதற்கிடையே நடுவானில் அந்த விமானம் அவசர நிலையில் சிக்கித் தவித்தபோது, நிலைமையை சமாளிப்பதற்காக விமானி பாகிஸ்தான் வான்வெளி வழியாக செல்வதற்கு லாகூர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு அனுமதி கோரினார். ஆனால் அவசரகால பயன்பாட்டுக்கும் அந்நாட்டு வான்வெளியை பயன்படுத்த லாகூர் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் அனுமதி மறுத்துவிட்டது.

அதன்பின் விமானி மோசமான வானிலைக்கு மத்தியிலும் வழக்கமான வான்வழியிலேயே விமானத்தை பத்திரமாக இயக்கிச் சென்று தரையிறக்கியது தற்போது தெரிய வந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com