

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இன்று நாடாளுமன்றச் சிறப்பு கூட்டத்தொடரில், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுடன் சேர்த்து இந்தத் தொகுதி மறுவரையறை மசோதாவும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. காரணம், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களின் நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கை குறையும் என்றும், இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும் எதிர்க்கட்சிகள் வாதிடுகின்றன.
இந்நிலையில் இந்த மசோதாவால் நாடாளுமன்றம் அபகரிக்கப்படுவதை எதிர்க்கட்சிகள் அனுமதிக்காது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில்,
‘மகளிர் இட ஒதுக்கீடு என்ற போர்வையில் கொண்டுவரப்படும் குறைபாடுள்ள தொகுதி மறுவரையறை மசோதாக்களால் நாடாளுமன்றம் அபகரிக்கப்படுவதை எதிர்க்கட்சி அனுமதிக்காது.
நாங்கள் ஒன்றுபட்டு நின்று, நமது ஜனநாயகத்தின் மீதான இந்த வஞ்சகத் தாக்குதலை எங்களது முழு பலத்துடன் எதிர்த்துப் போராடுவோம்.’ எனப் பதிவிட்டுள்ளார்.