பேரிடர் அல்ல... விபத்து: ‘வயநாடு மண்சரிவுக்கு மனித அலட்சியமே காரணம்’ - முதலமைச்சர் சதீசன் குற்றச்சாட்டு

மண்சரிவில் சிக்கி 1 உயிரிழப்பு, 7 பேர் மருத்துவமனையில் அனுமதி, 7 பேர் காணவில்லை.
பேரிடல் அல்ல... விபத்து: ‘வயநாடு நிலச்சரிவுக்கு மனித அலட்சியமே காரணம்’ - முதலமைச்சர் சுதீசன் குற்றச்சாட்டு
Published on

கேரளம் மாநிலம், வயநாடு கல்லாடி பகுதியில் நடந்த சுரங்கப்பாதை கட்டுமான நிலச்சரிவுக்கு, ஒப்பந்ததாரரின் அலட்சியமே முதன்மைக் காரணம் என்று அம்மாநில முதலமைச்சர் வி.டி.சதீசன் தெரிவித்துள்ளார்.

இது இயற்கை பேரிடர் அல்ல, மாறாக மனித தவறுகளால் ஏற்பட்ட விபத்து என அம்மாநில அமைச்சர்களும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

கட்டுமான தளத்தில் இருந்து தோண்டப்பட்ட மண்ணை அகற்றுமாறு மீண்டும் மீண்டும் அறிவுறுத்தியும், அதனை புறக்கணித்த ஒப்பந்தக்காரர்களின் அலட்சியத்தால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

“தோண்டப்பட்ட மண் அனைத்தையும் அகற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரும், பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவரும் ஜூன். 20ஆம் தேதியன்றே உத்தரவு பிறப்பித்தனர். பொதுப்பணித்துறை அமைச்சரும் ஒரு கூட்டத்தை நடத்தி, அதை அவசரமாக அகற்றுமாறு ஒப்பந்தக்காரர்களுக்கு அறிவுறுத்தினார்.

ஆனால், ஒப்பந்தக்காரர்கள் பேரிடர் மேலாண்மை ஆணையம், மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவில்லை. பிரச்சனை இந்தக் குவிந்து கிடந்த மண்தான். மழை பெய்தால் விபத்து ஏற்படும் என்பது தெரிந்திருந்தது.

அரசு மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தரப்பில் சாத்தியமான அனைத்தும் செய்யப்பட்டன. அவர்கள் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவில்லை என்பதுதான் முக்கியப் பிரச்சினை.” என சுதீசன் தெரிவித்தார்.

மேலும் இடிபாடுகளில் சிக்கி பலர் காயமடைந்துள்ளதாகவும், தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், ஒருவர் உயிரிழந்ததாகவும், ஏழு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் ஏழு பேரைக் காணவில்லை என்றும் முதலமைச்சர் சதீசன் தெரிவித்துள்ளார்.

அனக்கம்பொயில் - மேப்பாடி சுரங்கப்பாதை

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் மேப்பாடி அருகில் உள்ள கல்லாடியில் மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களை இணைக்கும் அனக்கம்பொயில் - மேப்பாடி சுரங்கப்பாதை திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் மீனாட்சி பாலம் அருகே இன்று வழக்கம்போல தொழிலாளர்கள் பணியில் ஈடுப்பட்டிருந்தபோது, கடந்த 24 மணி நேரத்தில் அப்பகுதியில் பெய்த கனமழையால், ஏற்கனவே அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த மண் குவியல் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com