

நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகிறது.
இதில் பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் லடாக் மாநில உரிமை செயல்பாட்டாளர் சோனம் வாங்சுக் கடந்த 7 நாட்களாக தனது காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடர்நது வருகிறார்.
அவரது உண்ணாவிர போராட்டம் தொடங்கிய நாள் முதல் தற்போது வரை அவர் தனது உடல் எடையில் 5 கிலோ கிராம் வரை குறைந்துள்ளதாகவும் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருவதாகவும் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய கல்வி அமைச்சரை இன்னும் பதவியிலிருந்து நீக்காதது ஏன் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே தனது எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது பதிவில்,
"தேர்வு முறைகேடுகள் மற்றும் மன உளைச்சல் காரணமாக நாடு முழுவதும் சுமார் 20 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்ட பிறகும், தர்மேந்திர பிரதானைப் பதவியிலிருந்து நீக்குவதற்குப் பிரதமர் மோடி இன்னும் எத்தனை நாட்கள் காத்திருக்கப் போகிறார்? பிரதமருக்குத் தர்மேந்திர பிரதான் ஏன் இந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தவராக இருக்கிறார்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
அபிஜித் தீப்கே வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், ஒருவேளை தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வரும் சோனம் வாங்சுக்கின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால், அதற்கு தற்போதைய மத்திய அரசுதான் முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், கல்வி அமைச்சர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை தங்களது உண்ணாவிரதப் போராட்டம் தடையின்றித் தொடரும் என்றும் சிஜேபி கட்சி அறிவித்துள்ளது.