

நகரி:
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் ராஜாம் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரா (வயது 35). இவர் விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படையில் தொழில்நுட்ப வல்லுனராக வேலை செய்து வந்தார். விசாகப்பட்டினத்தில் உள்ள எல்.வி. நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இவரது மனைவி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். ரவீந்திராவுக்கு திருமணத்துக்கு முன்பே மவுனிகா (29) என்ற பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
திருமணமான பின்னரும் அந்த பெண்ணுடனான தொடர்பு நீடித்து வந்ததாக தெரிகிறது. கள்ளக்காதலி மவுனிகா அடிக்கடி பணம் கேட்டு ரவீந்திராவை தொல்லை செய்து வந்ததாக தெரிகிறது.எனவே அவரை கொலை செய்ய ரவீந்திரா முடிவு செய்தார். வீட்டில் யாரும் இல்லாததால் மவுனிகாவை நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு அழைத்தார். அவரது அழைப்பை ஏற்று மவுனிகா வந்துள்ளார்.
அந்த சமயத்தில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த ரவீந்திரா, தயாராக வைத்திருந்த கத்தியால் மவுனிகாவை சரமாரியாக குத்தி கொலை செய்தார். அதன்பிறகும் ஆத்திரம் அடங்காத ரவீந்திரா, மவுனிகாவின் உடலை துண்டு. துண்டாக வெட்டினார்.
பின்னர் உடல் பாகங்களை பெரிய பிளாஸ்டிக் பையில் அடைத்து வீட்டில் இருந்த பிரிட்ஜில் வைத்தார். பின்னர், நேரடியாக போலீஸ் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார்.
ரவீந்திரா சொன்னதை கேட்டவுடன் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனே போலீசார் அவரது வீட்டுக்கு வந்து பிரிட்ஜில் இருந்த உடல் பாகங்களை மீட்டனர். ஆனால் பெண்ணின் தலையை மட்டும் காணவில்லை. அதனை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் கள்ளக்காதலியை தீர்த்துக்கட்டிய தாக கடற்படை ஊழியர் தெரிவித்தார். இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.