

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் மொஹரம் ஊர்வலத்தில் விஷம் கலந்த மாத்திரைகளை கொடுத்து மக்களை கொல்ல முயன்றவனின் சதியை போலீசார் முறியடித்துள்ளனர்.
புனேவின் விமான் நகரை சேர்ந்தவர் பையாஸ் பிரேம்ஜி. இவர் புனேவில் பெயிண்ட் வியாபாரம் செய்து வருகிறார்.
மும்பை டோங்ரியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்த அவர் ஜின்க் பாஸ்பைடு என்ற எலி விஷ பவுடரை மாத்திரைக்கான வெற்று கேப்சியூல்களுக்குள் ஒவ்வொரு மாத்திரையிலும் 1 கிராம் வீதம் நிரப்பி வந்துள்ளார். இவ்வாறு 14,900 மாத்திரைகளை அவர் தயாரித்துள்ளார்.
வழக்கமாக மொஹரம் ஊர்வலங்களின் போது, பங்கேற்பாளர்களுக்குப் புத்துணர்ச்சி அளிப்பதற்காகவோ அல்லது நேர்த்திக்கடனாகவோ உணவு, தண்ணீர் மற்றும் பாரம்பரியப் பானங்கள் போன்றவற்றுடன் சில நேரங்களில் உடலுக்கு ஆற்றல் தரும் மூலிகை மாத்திரைகள் விநியோகிக்கப்படுவது வழக்கம்.
இதை பயன்படுத்தி மும்பையின் ஜே.ஜே மற்றும் பைகுல்லா பகுதிகள் வழியாகச் சென்ற மொஹரம் ஊர்வலத்தின் போது இந்த நச்சு மாத்திரைகளைப் பிரேம்ஜி விநியோகித்துள்ளார்.
ஊர்வலத்தில் பங்கேற்ற நபர் ஒருவருக்கு திடீரென வாந்தியும் கடுமையான வயிற்று வலியும் ஏற்பட்டுள்ளது.
அவர் அளித்த புகாரின் பேரில், அங்கிருந்த போலீசார் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றிய பிரேம்ஜியை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையிலேயே, மொஹரம் ஊர்வலத்தில் பெருமளவிலான உயிரிழப்புகளை ஏற்படுத்தவே தான் இந்த விஷ மாத்திரைகளை விநியோகித்ததாகப் பிரேம்ஜி அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.
30,000 மாத்திரைகளைத் தயாரிக்க அவர் இலக்கு வைத்து செயல்பட்ட நிலையில் அதன் முன் அவர் போலீசில் பிடிபட்டார்.