என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியாவின் சுதந்திரத்தை மோடி அரசு அடமானம் வைத்துவிட்டது - ரஷிய எண்ணெய் விவகாரத்தில் காங்கிரஸ் சாடல்
    X

    இந்தியாவின் சுதந்திரத்தை மோடி அரசு அடமானம் வைத்துவிட்டது - ரஷிய எண்ணெய் விவகாரத்தில் காங்கிரஸ் சாடல்

    • நாம் என்ன வாழைப்பழக் குடியரசா?
    • அமெரிக்கா 30 நாள் அவகாசம் வழங்குகிறது என்ற வாசகமே ஆணவம் நிறைந்தது.

    மத்திய கிழக்கு போர் சூழலால் இந்தியா உட்பட பல உலக நாடுகளில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    உலகின் 20 சதவீத எண்ணெய் தேவைக்கு ஏற்றுமதி பாதையாக உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால் மத்திய கிழக்கில் இருந்து எண்ணெய் கப்பல்கள் வர முடியாத சூழல் நிலவுகிறது.

    இதற்கிடையே இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் வழங்க ரஷியா முன்வந்தது. ஆனால் அண்மையில் அமெரிக்காவுடன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தில் ரஷிய எண்ணெய் வாங்க மாட்டோம் என இந்தியா வாக்குறுதி அளித்திருந்தது.

    இந்நிலையில் அவசர கால சூழலை கருத்தில் கொண்டு 30 நாட்களுக்கு மட்டும் தற்காலிகமாக ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அனுமதி வழங்குவதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

    "இந்த 30 நாள் சலுகை ஏற்கனவே நடுக்கடலில் உள்ள கப்பல்களுக்கு மட்டுமே பொருந்தும். இதனால் ரஷ்யாவிற்குப் பெரிய நிதி ஆதாயம் கிடைக்காது" என்று அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவின் எரிசக்தி கொள்கையை அமெரிக்கா தீர்மானிப்பது நவ காலனித்துவ ஆதிக்கம் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மற்றும் பாஜக அரசை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.

    காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நீங்கள் புதினிடம் இருந்து எண்ணெய் வாங்கலாம் என டிரம்ப் அனுமதி அளித்துள்ளார். டிரம்ப் புதிய விளையாட்டைத் தொடங்கியுள்ளார். இது அமெரிக்காவின் அப்பட்டமான மிரட்டல்" என்று பதிவிட்டுள்ளார்.

    காங்கிரஸ் மக்களவை எம்.பி மணிஷ் திவாரி, "அமெரிக்கா 30 நாள் அவகாசம் வழங்குகிறது என்ற வாசகமே ஆணவம் நிறைந்தது. நாம் என்ன வாழைப்பழக் குடியரசா? நமது எரிசக்தி பாதுகாப்பைத் தீர்மானிக்க அமெரிக்காவின் அனுமதி தேவையா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி ரண்தீப் சிங் சுர்ஜேவாலா, "ஆபரேஷன் சிந்தூர் முதல் ரஷ்ய எண்ணெய் விவகாரம் வரை, பாஜக அரசு இந்தியாவின் சுதந்திரத்தை அடமானம் வைத்துவிட்டது. மத்தியில் ஒரு அரசாங்கம் இருக்கிறதா?" என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×