Iran War | மத்திய கிழக்கு போர் காரணமாக தொழில்துறை டீசல் விலை ரூ. 28 உயர்வு

பொருட்கள் கிடைப்பதில் எந்த இடையூறும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Iran War | மத்திய கிழக்கு போர் காரணமாக தொழில்துறை டீசல் விலை ரூ. 28 உயர்வு
Published on

அரசுக்கு சொந்தமான எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள், தொழில்துறை டீசலின் விலையை லிட்டருக்கு ரூ.28.22 உயர்த்தியுள்ளன. இது 25 சதவீதத்திற்கும் அதிகமான உயர்வாகும். இதன்மூலம் ஒரு லிட்டரின் புதிய விலை ரூ.137.81 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களால் புதன்கிழமை இந்த விலை மாற்றம் மேற்கொள்ளப்பட்டது.

வணிக மற்றும் தொழில்துறை நிறுவனங்களுக்கு நேரடியாக மொத்தமாக விற்கப்படும்போது, ​​HSD எனப்படும் அதிவேக டீசலுக்கு இது பொருந்தும். மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல் மற்றும் அதன் விளைவாக கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட உயர்வு இந்த நடவடிக்கைக்கு காரணம் என்று நிறுவனங்கள் குறிப்பிட்டன. இதேபோல், ஃபர்னஸ் ஆயில் விலை ஒரு லிட்டருக்கு ரூ.23.77 உயர்த்தப்பட்டுள்ளது.

தொழில்துறை மற்றும் மொத்த பயனர்களுக்கான விநியோகம் தடையின்றி தொடரும் என்று நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளன. பொருட்கள் கிடைப்பதில் எந்த இடையூறும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரண வாகன ஓட்டிகள் மற்றும் டீசல் கார் உரிமையாளர்களுக்கான பெட்ரோல் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை. இரண்டு வாரங்களுக்கும் குறைவான காலத்தில், தொழில்துறை டீசல் விலையில் இரண்டாவது முறையாக விலை உயர்த்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த மார்ச் 20-ஆம் தேதியன்று, இதே நிறுவனங்கள் டெல்லியில் மொத்த விலையை ஒரு லிட்டருக்கு ரூ.87.67-இல் இருந்து ரூ.109.59 ஆக உயர்த்தின. இது முந்தைய விலையில் இருந்து ரூ.22 அதிகம் ஆகும்.

அதே நேரத்தில், அவர்கள் பிரீமியம் 95-ஆக்டேன் பெட்ரோலின் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தின. ஈரான் சம்பந்தப்பட்ட மோதல் தீவிரமடைந்ததால், நேற்று (வியாழக்கிழமை) சர்வதேச எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 108.40 அமெரிக்க டாலரை எட்டியது.

நாட்டில் உள்ள அனைத்து சுத்திகரிப்பு நிலையங்களும் முழுத் திறனில் இயங்கி வருவதாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கச்சா எண்ணெய் கையிருப்பு போதுமானதாகவும், பெட்ரோல் மற்றும் டீசல் கையிருப்பு தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாகவும் உள்ளது.

பொதுமக்களுக்கு விற்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com