'வாட்ஸ்அப் பயனர் தகவல்களை பேஸ்புக்கிடம் கொடுத்து சம்பாதிக்கும் மெட்டா' - ரூ. 213 கோடி அபராதம்

நியாயமற்ற வணிக நடைமுறைகளில் மெட்டா ஈடுபட்டதாக இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) குற்றம் சாட்டியுள்ளது.வாட்ஸ்அப் 50 கோடி பயனாளர்களுடனும் பேஸ்புக் 37.8 கோடி பயனாளர்களுடன் முன்னணியில் உள்ளது
'வாட்ஸ்அப் பயனர் தகவல்களை பேஸ்புக்கிடம் கொடுத்து சம்பாதிக்கும் மெட்டா' - ரூ. 213 கோடி அபராதம்
Published on

பிரபல சமூக ஊடகங்களான வாட்ஸ்அப். பேஸ்புக் , இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை நிர்வகிக்கும் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா நிறுவனத்துக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு மாற்றப்பட்ட வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கைகள் மூலம் வாட்ஸ்அப் பயனாளர்களின் தகவல்களை, பேஸ்புக்கிடம் கொடுத்து சமூக வலைதள சந்தையின் நியாயமற்ற வணிக நடைமுறைகளில் மெட்டா ஈடுபட்டதாக இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) குற்றம் சாட்டியுள்ளது.

இதனால் மற்ற சமூக வலைத்தளங்களுக்கு வணிக ரீதியிலான இழப்பு ஏற்படுத்தப்பட்டதாகக் கூறி மெட்டா நிறுவனத்துக்கு 213.14 கோடி ரூபாய் அபராதம் விதித்து இந்திய போட்டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்த நியாயமற்ற நடைமுறையை உடனடியாக மெட்டா நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது. குறிப்பிட்ட அவகாசத்திற்குள் நடத்தை விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே இந்த உத்தரவை  எதிர்த்து மெட்டா நிறுவனம் மேல்முறையீடு செய்ய உள்ளதாக அதன்  இந்தியாவுக்கான செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

இந்திய சமூக வலைதள சந்தையில் மெட்டாவின் வாட்ஸ்அப் சுமார் 50 கோடி பயனாளர்களுடனும் பேஸ்புக் சுமார் 37.8 கோடி பயனாளர்களுடன் முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே இணையவழி காட்சி விளம்பர சந்தையிலும் இந்தியாவில் மெட்டா முன்னணியில் உள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com