'போலி' பாலாடைக்கட்டி - 'மெக் டொனால்டு' உணவகத்தின் உரிமம் ரத்து

போலியான பாலாடை கட்டி பீட்சா, பர்கர் விற்பனை செய்யும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.துரித உணவுகளான 'பீட்சா' மற்றும் பர்கர் விற்பனை செய்யும் இடங்களில் சோதனை செய்து விசாரிக்க திட்டமிட்டு உள்ளதாக உணவு பாதுகாப்பு கமிஷனர் கூறினார்.
'போலி' பாலாடைக்கட்டி - 'மெக் டொனால்டு' உணவகத்தின் உரிமம் ரத்து
Published on

மெக் டொனால்டு நிறுவனம் 1940-களில் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டு இன்று உலகின் பல்வேறு பகுதிகளில் கிளைகளை பரப்பியுள்ளது.

அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அகமதுநகரில் உள்ள ஒரு மெக் டொனால்டு துரித உணவக கடையில் போலி பாலாடைக்கட்டியில் தயாரான பர்கர், பீட்சா விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறைக்கு புகார் வந்தது. இதைத் தொடர்ந்து அந்த துரித உணவு விற்பனைக் கடையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு போலியான பாலாடைக்கட்டி ( சீஸ்) துரித உணவுகள் தயாராவதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து அந்த உணவகம் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்தனர். மேலும் அந்த கடையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து உணவு பாதுகாப்புதுறை நடவடிக்கை எடுத்தது.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு கமிஷனர் அபிமன்யு காலே கூறியதாவது:-

இதுபோன்ற போலியான பாலாடை கட்டி பீட்சா, பர்கர் விற்பனை செய்யும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற தவறான உணவுகளை உட்கொள்ளும் பொதுமக்களுக்கு உடல்நலக்குறைவு மற்றும் பாதிப்புகள் ஏற்படும். போலியான விளம்பரங்கள் வெளியிட்டு பொதுமக்களை ஏமாற்றும் கடைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதுபோல துரித உணவுகளான 'பீட்சா' மற்றும் பர்கர் விற்பனை செய்யும் இடங்களில் சோதனை செய்து விசாரிக்க திட்டமிட்டு உள்ளதாக அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com