

இந்தியாவில் இருந்து பஞ்சாபை பிரித்து காலிஸ்தான் என்ற நாடாக மாற்றக் கோரி செயல்படுபவர்கள் காலிஸ்தான் பயங்கரவாதிகள். இவர்களின் நெட்வொர்க் உலகம் முழுவதும் இயங்கி வருகிறது.
குறிப்பாக கனடாவில் இவர்களின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. இவர்கள் அவ்வப்போது இந்தியாவுக்கு மிரட்டல்கள் விடுப்பது வழக்கம்.
இந்நிலையில் டெல்லி மற்றும் உத்தராகண்டில் உள்ள முக்கியக் கோவில்கள், அரசு அலுவலகங்கள், ரெயில் நிலையங்கள், அரசியல் தலைவர்களை குறிவைத்து காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை இன்று எச்சரித்தது.
பாதுகாப்பு அமைப்புகளுக்கு வந்த மிரட்டல் இமெயிலை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து டெல்லி மற்றும் உத்தராகண்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இரு மாநிலங்களிலும் உச்சகட்ட அலர்ட்டில் வைக்கப்பட்டுள்ளன.
உத்தராகண்ட் மற்றும் டெல்லி போலீசார் முக்கிய இடங்களில் பாதுகாப்பு வளையம் அமைத்து தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நடைபெறாமல் தடுப்பதற்காக துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர ரோந்து மற்றும் வாகனச் சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர்.
மிரட்டல் இமெயில் எங்கிருந்து, யாரால் அனுப்பப்பட்டது என்ற அதன் உண்மைத்தன்மையை அறிய விரிவான விசாரணையை பாதுகாப்பு அமைப்புகள் தொடங்கியுள்ளன.
அண்மையில் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சீக்கிய குருத்வாராவில், நிஹாங் சீக்கியர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி நிஹாங் சீக்கியர்கள் போராட்டம் நடத்தியதால் சில நாட்களாக அங்கு பதற்றம் நிலவியது.
இந்தச் சம்பவம் நடந்து சில நாட்களிலேயே, தற்போது காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளின் பெயரில் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.