என் மலர்
இந்தியா

கர்நாடகா: கே.ஆர்.எஸ். அணை 2 ஆண்டுகளுக்குப் பிறகு முழு கொள்ளளவை எட்டியது
- கே.ஆர்.எஸ். அணைக்கு நீர் வரத்து 41,000 கன அடியாக உள்ளது.
- கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு 38,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமம் அருகே அமைந்துள்ளது கிருஷ்ணராஜசாகர் அணை( கே.ஆர்.எஸ்.). இந்த அணை காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்திருக்கிறது. இதனால் இந்த அணை முக்கிய அணையாக கருதப்படுகிறது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட கொள்ளளவு 124.80 அடி ஆகும். இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளாக குடகு மாவட்டமும், கேரள மாநிலம் வயநாடு பகுதியும் அமைந்துள்ளது.
அந்த பகுதிகளில் தற்போது தொடர் கனமழை பெய்து வருவதால் கே.ஆர்.எஸ். அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து இருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் அணை எப்போது வேண்டுமானாலும் நிரம்பிவிடும் என்று கருதப்பட்டது.
அதன்படி நேற்று மாலையில் கே.ஆர்.எஸ். தனது முழு கொள்ளளவான 124.80 அடியை எட்டி முழுமையாக நிரம்பியது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு கே.ஆர்.எஸ். அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
கே.ஆர்.எஸ். அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அணைக்கு நீர் வரத்து 41,000 கன அடியாக உள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரி வழியே தமிழ்நாட்டுக்கு 38,500 கன அடி தண்ணீரும், கர்நாடக விவசாய நிலங்களுக்கு கால்வாய் மூலம் 2,500 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.






