

கேரள மாநிலம் கன்னூர் அருகே உள்ள திமிரி பகுதியில் 2011 ஆம் ஆண்டு நவம்பர் 7 அன்று ஆர்எஸ்எஸ் - பாஜகவினர் 30 பேர் வந்த வாகனத்தின் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. இதில் 9 பேர் படுகாயமடைந்தனர்.
தாக்குதலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 10 பேர் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் வெடிபொருள் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் புதிய கிளை அந்தப் பகுதியில் திறக்கப்பட்டதை தொடர்ந்து இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் மோதல் காரணமாக இந்தத் தாக்குதல் நடைபெற்றது.
வழக்கு விசாரணை 15 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் கன்னூர் மாவட்ட நீதிமன்ற அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதில் மாவட்ட நீதிமன்ற நீதிபதி பிரசாந்த், வெடிகுண்டை வாகனத்தின்மீது வீசிய முக்கியக் குற்றவாளியான டிவி பினு என்பவருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் மற்ற 9 பேருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்தார்.
மேலும் 10 பேருக்கும் தலா ரூ. 2.6 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.