

இந்தியாவின் மிகப்பெரிய பொதுப் போக்குவரத்து அமைப்பாக ரெயில்வே திகழ்கிறது. ஏழை, எளிய மக்கள் முதல் வசதிபடைத்த மக்கள் வரை அனைவரும் பயன்பெறும் வகை யில் இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான வழித்தடங்களில் 13 ஆயிரம் பயணிகள் ரெயில்கள் உள்பட தினசரி 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த ரெயில்களில் கோடிக்கணக்கான மக்கள் தினந்தோறும் பயணிக்கின்றனர். இத்தகைய சிறப்பு மிக்க இந்திய ரெயில்வேயில் 14 லட்சத்து 80 ஆயிரத்து 455 பணியாளர்கள் உள்ளனர். அதில், 2 சதவீதம் அதாவது 29 ஆயிரத்து 608 பணியாளர்களை குறைக்க ரெயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.
இந்திய ரெயில்வேயில், சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தெற்கு ரெயில்வே, இந்தியாவின் முதல் மண்டலமாகவும், தென் இந்தியாவின் முக்கிய போக் குவரத்து இணைப்பாகவும் திகழ்கிறது. 4 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் சுமார் 5 ஆயிரத்து 100 கிலோ மீட்டர் தூரத்திற்கு 6 கோட்டங்கள் மூலம் தினசரி லட்சக்கணக்கான பயணிகளுக்குப் பாதுகாப்பான மற்றும் வசதியான சேவையை வழங்கி வருகிறது.
இத்தகைய சிறப்பு மிக்க தெற்கு ரெயில்வேயில் 95 ஆயிரத்து 322 பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களில் 2 சதவீதம் என்ற வகையில் ஆயிரத்து 906 பணியிடங்களை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதே போன்று, ஒருங்கிணைந்த ரெயில் பெட்டித் தொழிற்சாலை (ஐ.சி.எப்.) நிறுவனத்தில் மொத்தம் 10 ஆயிரத்து 862 பணியாளர்கள் பணியாற்றி வரும் சூழலில், அதில் 2 சதவீதம் என்ற வகையில் 217 பணியிடங்கள் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய ரெயில்வேயில் 2 சதவீதம் பணியாளர்கள் குறைக்கப்பட உள்ளதற்கு ரெயில்வே சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.