

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே இரண்டு வார கால தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது.
இதையடுத்து ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அமைதி பேச்சுவார்த்தை சமீபத்தில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடந்தது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் மீண்டும் மோதல் ஏற்படும் சூழல் நிலவுகிறது.
அமெரிக்கா - ஈரான் இடையே புதிய சுற்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகு இந்தியக் கொடியுடன் கூடிய 'ஜக் விக்ரம்' என்ற எல்பிஜி கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்தது. இந்த வழித்தடத்தை கடந்த முதல் இந்திய கப்பல் இதுவாகும்.
மும்பையைச் சேர்ந்த கிரேட் ஈஸ்டர்ன் ஷிப்பிங் நிறுவனத்திற்குச் சொந்தமான 'ஜக் விக்ரம்', 20,000 டன் எல்பிஜி எரிவாயுவை ஏற்றி வந்தது. இந்தப் பயணத்தின்போது அதில் 24 மாலுமிகள் இருந்தனர்.
இந்நிலையில ஜக் விக்ரம் என்ற எல்பிஜி கப்பல், ஹார்முஸ் ஜலசந்தியை வெற்றிகரமாகக் கடந்து, நேற்று குஜராத் மாநிலம் காண்ட்லா துறைமுகத்திற்கு பாதுகாப்பாக வந்தடைந்தது. இந்தக் கப்பல் 20,400 மெட்ரிக் டன் திரவ பெட்ரோலிய வாயுவை (எல்பிஜி) ஏற்றி வந்துள்ளது.