

அருணாச்சல பிரதேசத்தின் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவம் பார்டர் ப்ரூவ் கஃபே கடையை திறந்துள்ளது.
அருணாச்சல பிரதேசத்தின் தவாங் மாவட்டத்தில் உள்ள கடைசி எல்லை கிராமமான ஜெமிதாங்கில் இந்த Border Brew Cafe அமைந்துள்ளது.
நியாம்ஜாங் சூ ஆற்றின் குறுக்கே பயன்பாட்டில் இல்லாத பழைய பெய்லி பாலத்தின் மீது இந்த கஃபே கட்டப்பட்டுள்ளது.
'ஆபரேஷன் சத்பாவனா' திட்டத்தின் கீழ், இந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் சுற்றுலாவை ஊக்குவிக்கவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்திய ராணுவம் இதை வெறும் 31 நாட்களில் கட்டி முடித்து சாதனை படைத்துள்ளது. உள்ளூர் மோன்பா பழங்குடியின பெண்கள் இந்த கஃபேயை நடத்த உள்ளனர்.
இதன் மூலம் எல்லைப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் மக்களுக்கும் ராணுவத்திற்கும் இடையிலான உறவை வலுப்படுத்த கல்வி, மருத்துவம் மற்றும் உள்கட்டமைப்பு பணிகளை செய்யும் 'ஆபரேஷன் சத்பாவனா' திட்டம், இப்போது அருணாச்சல எல்லைகளிலும் தனது முத்திரையை பதித்துள்ளது.
லெப்டினன்ட் கர்னல் மகேந்திர ராவத் இது குறித்து பேசுகையில், "இந்தக் காபி ஷாப் ஜெமிதாங் பள்ளத்தாக்கின் அழகை ரசிக்க வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு முக்கியமான இடமாக அமையும். இது உள்ளூர் கலாச்சாரம் மற்றும் விருந்தோம்பலை உலகிற்கு அறிமுகப்படுத்தும்" எனத் தெரிவித்தார்.