

ஐதராபாத்தில் மனைவி 3 பேருடன் தொடர்பில் இருந்ததால் அவரது அந்தரங்க வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றிய பரபரப்பான தகவல்கள் வருமாறு:-
ஐதராபாத் பச்சுபல்லி பகுதியை சேர்ந்த சீதாராம் என்ற 36 வயது இளம் என்ஜினீயர் கடந்த பிப்ரவரி 9-ந்தேதி அங்குள்ள ஹுசைன் சாகர் ஏரியில் பிணமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக பச்சுபல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
போலீஸ் விசாரணையில் என்ஜினீயர் சீதாராமுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு இருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். என்ஜினீயர் சீதாராம் தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது பற்றி நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது.
அவரது 30 வயது இளம் மனைவிக்கு 3 பேருடன் தொடர்பு இருந்ததும் அதில் ஒருவரோடு மிகவும் நெருக்கமாக இருந்ததும் அது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் (இன்ஸ்டாகிராம்) வெளியானதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக சீதாராம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டு இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சீதாராம் குடும்பத்தினர் கூறும் போது, மனைவியின் முறைதவறிய உறவு காரணமாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த சீதாராமை நாங்கள் ஆறுதல்படுத்தி வந்தோம். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் ஐதராபாத்தை சேர்ந்த ஓட்டல் அதிபர் ஒருவருடன் சீதாராமின் மனைவி ஒன்றாக இருப்பது போன்ற அந்தரங்க வீடியோவை சீதாராம் பார்த்துள்ளார்.
அதன் பிறகு அவர் மிகுந்த மன உளைச்சலோடு நான் அவள் (மனைவி) மீது எவ்வளவு பாசம் வைத்திருந்தேன். இப்படி மற்றவர்களோடு தவறாக பழகி வருகிறாளே என்று கூறி வந்தார். அவரிடம் எல்லாம் சரியாகி விடும். இனி அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுத்து விடாதே என்று கூறி வந்தோம். ஆனால் எங்களை விட்டு சென்று விட்டார் என்று கண்ணீருடன் தெரிவித்தனர்.
இது தொடர்பாக பச்சுபல்லி போலீசார் நடத்திய விசாரணையில் சீதாராம் தனது மனைவியின் நடவடிக்கை பற்றி 19 பக்கத்தில் விரிவாக கடிதம் எழுதி வைத்திருந்தது தெரிய வந்தது.
அதில் மனைவியின் நடவடிக்கைகள் பற்றி அவர் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டுள்ளார். அடிக்கடி வீட்டை விட்டு மனைவி செல்வது பற்றியும் பின்னர் அவர் விரும்பும் போதுதான் வருவார் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதனைத் தொடர்ந்து சீதாராமை தற்கொலைக்கு தூண்டியதாக மனைவியும் அவரோடு தவறான தொடர்பில் இருந்த ஓட்டல் அதிபரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கடந்த பிப்ரவரி 8-ந்தேதி சீதாராம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவர் செல்போனில் வைத்திருந்த வாட்ஸ்அப் ஸ்டேட்ஸ் மூலம் அவரது இருப்பிடத்தை கண்டு பிடித்து உடலை கைப்பற்றினர்.
சீதாராம் தற்கொலை செய்து 3 மாதங்கள் கடந்து உள்ள நிலையில் தற்போது தான் அவரது தற்கொலை பற்றியும் மனைவி அந்தரங்க லீலைகள் குறித்தும் புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்த சம்பவம் தொடர்பாக பாரதீய நியாய சம்ஹிதா சட்டப்பிரிவு 108-ன் கீழ் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து இருந்த போலீசார் கடந்த மாதம் 21-ந்தேதிதான் சீதாராமின் மனைவியையும், ஓட்டல் அதிபரையும் கைது செய்தோம் என்று பச்சுபல்லி போலீசார் தெரிவித்து உள்ளனர்.
என்ஜினீயர் சீதாராம் தனது மனைவி மீது மிகுந்த பாசத்தோடு இருந்ததாகவும் ஆனால் அதையெல்லாம் அலட்சியம் செய்து விட்டு மற்றவர்களோடு அந்தரங்க வீடியோக்களை எடுக்கும் அளவுக்கு அவரால் எப்படி பழக முடிந்தது என்பதை எங்களால் நம்ப முடியவில்லை என்றும் யாரை நம்புவது என்றே தெரியவில்லை என்றும் சீதாராமின் உறவினர்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் ஐதராபாத்தில் சீதாராமுடன் பணியாற்றிய என்ஜினீயர்கள் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.