

குஜராத் மாநிலம் அகமதாபாத் சைபர் குற்றப் பிரிவு போலீசார் ஏஐ மூலம் நடைபெற்று வந்த மோசடியை முறியடித்துள்ளனர்.
அகமதாபாத்தை சேர்ந்த அந்த தொழிலதிபர் ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்து வருகிறார். அண்மையில் அவருக்கு ஒரு முறை மட்டும் பயன்படும் கடவுச்சொற்கள் அதாவது ஓடிபி எதுவும் தனது வங்கியில் இருந்து வாராமல் இருந்ததால் சந்தேகம் அடைந்து சைபர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
போலீசார் நடத்திய விசாரணையில், தொழிலதிபரின் முகத்தைப் போன்று கூகுள் ஜெமினி ஏஐ மூலம் டீப்பேக் வீடியோக்களை உருவாக்கி அதன் மூலம் ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பை இவர்கள் ஏமாற்றியுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
ஆதாருடன் இணைக்கப்பட்ட அவரின் மொபைல் நம்பரை ஓடிபி வெரிஃபிகேஷன் இல்லாமலேயே மாற்றியுள்ளனர். இதனால்தான் வங்கி தொடர்பான ஓடிபி எண்களை தொழிலதிபரால் பெற முடியவில்லை.
அது மூலம் 3 புதிய வாங்கிக்கணக்குகளை உருவாக்க முயன்றுள்ளனர். அவ்வாறு ஒரு வங்கிக் கணக்கு அவர்களால் உருவாக்கப்பட்டு அவரது பெயரில் ரூ.25,000 கடன் பெறப்பட்டுள்ளது.
மேலும் தொழிலதிபரின் டிஜி-லாக்கர் கணக்கையும் ஊடுருவி அவர் சேமித்து வைத்திருந்த அவரின் ஆவணங்களையும் திருட முயன்றுள்ளனர்.
இந்த மோசடியில் கனுபாய் பார்மர், ஆஷிஷ் வனந்த், முகமது கைஃப் படேல் மற்றும் தீப் குப்தா ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ஒருவர் பொதுச் சேவை மையத்தில் பணியாற்றியவர். அவர் தனக்கு இருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆதார் சிஸ்டத்தில் மொபைல் எண்ணை மாற்ற உதவியுள்ளார்.
சமீபத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஏஐ தொழில்நுட்பங்களால் வங்கித் துறைக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து உயர்மட்டக் கூட்டத்தை நடத்தினார்.
குறிப்பாக, ஆந்திரோபிக் நிறுவனத்தின் கிளாட் மிதோஸ் போன்ற சக்திவாய்ந்த ஏஐ மாடல்களால் ஏற்படும் சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்த சூழலில் குஜராத்தில் ஏஐ மூலம் நடைபெற்ற இந்த மோசடி பரவலாக கவலையை ஏற்படுத்தியுள்ளது.