கெஜ்ரிவாலை மிரட்டும் வகையில் வாசகம்: பிரதமர் அலுவலகம் மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

அரவிந்த் கெஜ்ரிவால் ஜெயிலில் இருந்து வெளியே வந்ததில் இருந்து பா.ஜனதாவுக்கு பயம் ஏற்பட்டுவிட்டது.இந்த சதித்திட்டம் நேரடியாக பிரதமர் அலுவலகத்தில் இருந்து நடத்தப்படுகிறது.
கெஜ்ரிவாலை மிரட்டும் வகையில் வாசகம்: பிரதமர் அலுவலகம் மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
Published on

டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது இடைக்கால ஜாமினில் வெளியில் வந்து தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

அரவிந்த கெஜ்ரிவாலை பார்த்து பா.ஜனதா பயப்படுகிறது. டெல்லியில் உள்ள மக்களவை தொகுதிகளை பா.ஜனதா இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பா.ஜனதா சதித்திட்டம் தீட்டுகிறது என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.

சில தினங்களுக்கு முன்னதாக ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால் கெஜ்ரிவால் வீட்டில் வைத்து தாக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பா.ஜனதா சதி செய்கிறது என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் டெல்லியின் ராஜிவ் சவுக் மற்றும் பட்டேல் நகர் மெட்ரோ நிலையங்களில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வாசகம் எழுதப்பட்டிருந்தது. இதற்கு பிரதமர் அலுவலகம்தான் காரணம் என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சஞ்சங் சிங் கூறியதாவது:-

அரவிந்த் கெஜ்ரிவால் ஜெயிலில் இருந்து வெளியே வந்ததில் இருந்து பா.ஜனதாவுக்கு பயம் ஏற்பட்டுவிட்டது. அரவிந்த் கெஜ்ரிவால் மீது கொடூர தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி வருகிறது. இந்த சதித்திட்டம் நேரடியாக பிரதமர் அலுவலகத்தில் இருந்து நடத்தப்படுகிறது. டெல்லி மாநில ராஜிவ் சவுக் மற்றும் பட்டேல் நகர் மெட்ரோ நிலையங்களின் உள்பக்கத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலை மிரட்டல் விடுக்கும் வகையில் எழுதி வைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா ஆகியவை வெறுப்பு மற்றும் பழிக்குப்பழி என்பதில் மூழ்கியுள்ளதால், அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி செய்து கொண்டிருக்கிறார்கள். அரவிந்த கெஜ்ரிவாலுக்கு ஏதாவது நடந்தால் அதற்கு பிரதமர் அலுவலகம், பா.ஜனதா, மோடி பொறுப்பு என்பதை அரசு, நிர்வாகம், தேர்தல் ஆணையத்திற்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்

இவ்வாறு ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சங் சிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டெல்லி மாநில மந்திரி அதிஷி கூறுகையில் "சுவற்றில் வரையப்பட்ட படம் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு அதிகாரிகள் அங்கு உள்ளனர். சிசிடிவி கேமரா உள்ளது. அப்படி இருந்தும் போலீசார் இன்னும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?. சைபல் செல் எங்கே?. இந்த விசயங்களை பார்க்கும்போடு பா.ஜனதாவில் கட்டமைக்கப்பட்டுள்ள எனத்தெரிகிறது" என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com