

செர்விக்கல் கேன்சர் என்று அழைக்கப்படும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இந்தியாவில் அதிகரித்து வரும் பொது சுகாதார பிரச்சினையாக இருந்து வருகிறது.
உலக சுகாதார அமைப்பின் குளோபோகான் அறிக்கையின்படி, இந்தியாவில் பெண்களுக்கு ஏற்படும் இரண்டாவது புற்றுநோயாக இது அதிகரித்துள்ளது.
ஆண்டுதோறும் 1 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகளும், கிட்டத்தட்ட 80 ஆயிரம் இறப்புகளும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் ஏற்படுவதாக பதிவாகியுள்ளன.
இதையடுத்து இளம் பெண்களை கர்ப்பப்பை வாய் புற்று நோயிலிருந்து பாதுகாப்பதற்காக, மேற்குவங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி தலைமையிலான அரசாங்கம் மாநிலம் முழுவதும் மனித பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசி திட்டத்தை தொடங்கியுள்ளது.
உலக சுகாதார அமைப்பு மற்றும் இந்தியாவின் தேசிய நோய்த்தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனைக் குழு உள்ளிட்ட அமைப்புகளால் HPV தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் உள்ள 14 வயது நிறைவு செய்து, 15 வயதை எட்டாத சிறுமிகளுக்கு அரசு சுகாதார நிலையங்களில் குவாட்ரிவலண்ட் கார்டசில்-4 தடுப்பூசியின் ஒரு டோஸ் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
தேசிய திட்டத்தின் கீழ் இலவசமாக செலுத்தப்படும் தடுப்பூசி, பெற்றோர்/பாதுகாவலரின் ஒப்புதலுக்குப் பிறகே செலுத்தப்படும் என்றும், மேலும் அது தனி நபரின் விருப்பத்திற்கு பிறகே செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ கல்லூரிகள், மாவட்ட மருத்துவமனைகள், துணைப் பிரிவு மருத்துவமனைகள், மாநில பொது மருத்துவமனைகள் மற்றும் வட்டார ஆரம்ப சுகாதார மையங்கள் உள்ளிட்ட 881 இடங்களில் தடுப்பூசி போடும் அமர்வுகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.