

பீதியில் முன்பதிவு செய்வதை தவிர்க்க வலியுறுத்தி உள்ளனர்.
அணு ஆயுத போட்டி காரணமாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. ஈரானும் தன் பங்கிற்கு பதில் தாக்குதல் நடத்துகிறது. மேலும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறி வைத்து தாக்கி வருகிறது. தாக்குதல் மட்டுமின்றி உலகளவில் எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் விநியோகத்தை பாதிக்க செய்யும் நடவடிக்கைகளில் ஈரான் தீவிரம் காட்டி வருகிறது.
மத்திய கிழக்கு போர் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை சீரற்ற நிலையில் உள்ளது. மேலும் எரிவாயு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுக்க வணிக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதேபோல் நாடு முழுக்க கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பெரும்பாலான ஓட்டல்கள் மூடப்பட்டன. சமையல் கியாஸ் தட்டுப்பாடு சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
ஈரான் போர் காரணமாக எல்.பி.ஜி. தட்டுப்பாடு சூழல் ஏற்பட்ட நிலையில், எல்.பி.ஜி. விநியோகங்கள் நிலையானதாக இருக்கும் என்றும், உள்நாட்டு விநியோகம் இடையூறு இல்லாமல் தொடர்கிறது என்றும் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. நாடு முழுவதும் சீரான மற்றும் சரியான நேரத்தில் சிலிண்டர் விநியோகம் உறுதிசெய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மக்கள் பீதியில் முன்பதிவு செய்வதை தவிர்க்கவும் வலியுறுத்தி உள்ளனர்.