கேரளத்தில் ஒரே கிணற்றில் கிடந்த 53 ஆமைகளை மீட்ட வனத்துறையினர்

ஆமைகள் கிடந்த கிணறு பல ஆண்டுகளாக பொது மக்களால் பயன்படுத்தப்படாமல் இருந்துள்ளது. வயல் வெளியில் இருந்ததால் அந்த கிணற்றில் தண்ணீர் இருந்துள்ளது. அதிலேயே ஆமைகள் வெகு காலமாக வாழ்ந்து வந்துள்ளன.
கேரளத்தில் ஒரே கிணற்றில் கிடந்த 53 ஆமைகளை மீட்ட வனத்துறையினர்
Published on

கேரளம் மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள ஊர் பள்ளியரக்கல். இங்கிருக்கும் பகவதியம்மன் கோவில் கேரளம் மாநிலத்தில் இருக்கும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாகும்.

இந்த கோவிலுக்கு சற்று தொலைவில் இருக்கும் வயல்வெளியில் பொதுமக்களால் பயன்படுத்தப்படாத கிணறு ஒன்று உள்ளது. அந்த கிணற்றுக்குள் சம்பவத்தன்று தெரு நாய் ஒன்று விழுந்துவிட்டது. கிணற்றுக்குள் தெரு நாய் தத்தளித்து கொண்டிருந்ததை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பார்த்தனர். அந்த தெரு நாயை மீட்க சிலர் கிணற்றுக்குள் இறங்கினர். அப்போது அந்த கிணற்றுக்குள் இருந்த தண்ணீரில் ஏராளமான ஆமைகள் நீந்திக் கொண்டிருந்தன. ஒரு கிணற்றுக்குள் இத்தனை ஆமைகளா? என்று வியக்கும் வகையில் ஏராளமான ஆமைகள் கிடந்தன.

அது குறித்து அந்த பகுதி மக்கள், கவுன்சிலருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் அது பற்றி வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து வனத்துறையை சேர்ந்த மீட்பு குழுவினர் ஆமைகள் கிடந்த கிணற்றுக்கு சென்றனர். அவர்கள் உள்ளே இறங்கி ஒவ்வொரு ஆமையாக வெளியே எடுத்து கொண்டு வந்தனர். ஆமைகளை மீட்க வனத்துறையினருக்கு பொதுமக்களும் உதவி செய்தனர். அந்த கிணற்றில் இருந்து மொத்தம் 53 ஆமைகள் மீட்கப்பட்டன. அனைத்து ஆமைகளும் எந்தவித ஆரோக்கிய குறைபாடும் இல்லாமல் இருந்துள்ளன. ஆமைகள் கிடந்த கிணறு பல ஆண்டுகளாக பொது மக்களால் பயன்படுத்தப்படாமல் இருந்துள்ளது. வயல் வெளியில் இருந்ததால் அந்த கிணற்றில் தண்ணீர் இருந்துள்ளது. அதிலேயே ஆமைகள் வெகு காலமாக வாழ்ந்து வந்துள்ளன.

அந்த கிணற்றை பொது மக்கள் பயன்படுத்தாததால் அதனுள் ஆமைகள் கிடைப்பதை இதுவரை யாரும் பார்க்கவில்லை. கிணற்றுக்குள் தவறி விழுந்த தெரு நாயை மீட்க சென்ற போதே, அதில் ஏராளமான ஆமைகள் வாழ்ந்து வந்தது தெரியவந்தது. மீட்கப்பட்ட ஆமைகள் அனைத்தும் வனத்துறையினரால் பாதுகாப்பான இடத்தில் விடப்பட்டன.

X

Maalai Malar
www.maalaimalar.com