

சத்தீஸ்கர் மாநிலத்தில் தர்பூசணி பழம் சாப்பிட்ட 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கரின் ஜாஞ்ச்கிர்-சம்பா மாவட்டத்தில் உள்ள குர்கோட் கிராமத்தை சேர்ந்த அகிலேஷ் திவார் (15) பாட்டி வீட்டிற்குச் சென்றுள்ளார்.
கடந்த ஞாயிறு மாலையில் உறவுக்கார சிறுவர்கள் 3 பேருடன் சேர்ந்து அகிலேஷ், , வீட்டில் வெட்டி வைக்கப்பட்டிருந்த தர்பூசணி பழத்தை சாப்பிட்டுள்ளான்.
சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே அகிலேஷிற்கு வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. மற்ற மூன்று சிறுவர்களுக்கும் இதே போன்ற அறிகுறிகள் தென்பட்டுள்ளன.
மறுநாள்(நேற்று) காலை மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அகிலேஷ் பரிதாபமாக உயிரிழந்தான். மற்ற மூவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காலையிலேயே வெட்டி வைக்கப்பட்ட தர்பூசணி பழத்தை மாலையில் சாப்பிட்டதால் அது கெட்டுப்போய் உணவு நஞ்சாகியிருக்கலாம் எனக் மருத்துவர் தெரிவித்தார்.
வீட்டில் இருந்த மற்றொரு தர்பூசணி பழம் உணவுப் பாதுகாப்புத் துறையினரால் சோதனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.