புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க திட்ட அறிக்கை-மாநிலங்களிடம் மத்திய அரசு கோரிக்கை

தமிழகத்தில் 57 சதவீத குழந்தைகள் இரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டாக்டர் பாரதி பிரவீன் பவார்,  மக்களவை
டாக்டர் பாரதி பிரவீன் பவார், மக்களவை
Published on

புதுடெல்லி:


பாராளுமன்ற மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார், எழுத்து பூர்வமாக அளித்துள்ள பதிலில் தெரிவித்துள்ளதாவது:

மாநிலங்களில் அரசு அல்லது தனியார் மருத்துவக் கல்லூரிகள் இல்லாத பகுதிகள் மற்றும் மாவட்டங்களில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் மத்திய அரசின் பங்களிப்புடன் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. 

இத்திட்டத்தின்படி, 157 புதிய மருத்துவக் கல்லூரிகள் 3 கட்டமாக அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு, 70 கல்லூரிகள் ஏற்கனவே இயங்கி வருகிறது. தமிழகத்தில் ராமநாதபுரம் மற்றும் விருதுநகரில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்தத்  திட்டத்தின் படி புதிய மருத்துவக்  கல்லூரிகள் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசிடமிருந்து வரவேற்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மற்றொரு கேள்விக்கு அவர் அளித்துள்ள பதிலில்,  ரத்த சோகை இல்லா பாரதம் திட்டத்தின்படி பெண்கள், குழந்தைகள் மற்றும் நோய்களால் பாதிக்கப்படக்கூடிய வயதினருக்கு ரத்தச் சோகையைக் குறைக்க, தடுப்பு மற்றும் குணப்படுத்துவதற்கான வழிமுறைகள் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தேசிய குடும்ப சுகாதார ஆய்வு-5-ன் படி, 

6-59 மாதங்கள் வரையிலான குழந்தைகளில் 57.4 சதவீதம், 15-49 வயது கர்ப்பிணிப்  பெண்களிடையே 53.6 சதவீதம், 15-49 வயது கர்ப்பிணி பெண்களிடையே 48. 3 சதவீதம், 15-49 வயதுடைய பெண்கள் இடையே 53.4 சதவீதம், வளரிளம் பெண்களிடையே (15-19 வயது) 52.9 சதவீதம் மற்றும் வளரிளம் ஆண்களிடையே  (15-19 வயது) 24.6 சதவீதம் ரத்த சோகை பாதிப்பு உள்ளது. இவ்வாறு அவர் தமது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com