"கல்யாணத்துக்கு முன்பே இப்படியா?"... மகளின் எதிர்காலத்திற்காக திருமணத்தை நிறுத்திய தந்தை!

மணமக்களை ஒரு வாகனத்தில் ஏற்றி ஊர்வலத்தைத் தொடங்கினர். இரு குடும்ப உறவினர்கள், உள்ளூர் இளைஞர்களும் நடனமாடியபடி சென்றனர்.
திருமணத்தை நிறுத்திய தந்தை
Published on

ஆந்திர மாநிலம் மார்க்கபுரம் மாவட்டம் ரச்சார்லா மண்டலத்தின் சின்னகனிபள்ளி கிராமத்தைச் சேர்ந்த வாலிபருக்கும், துரிமெல்லாவைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் நேற்று திருமணம் நடைபெற இருந்தது.

நடனம்

இதற்கான ஏற்பாடுகளை செய்தனர். திருமணத்திற்கு முந்தைய நாளான சனிக்கிழமை இரவு மணமகன் மற்றும் மணப்பெண் அழைப்பு நடைபெற்றது.

சனிக்கிழமை இரவு, மணமக்களை ஒரு வாகனத்தில் ஏற்றி ஊர்வலத்தைத் தொடங்கினர். இரு குடும்ப உறவினர்கள், உள்ளூர் இளைஞர்களும் நடனமாடியபடி சென்றனர்.

இதற்கிடையில், சிலர் மணமக்களை நடனமாட அழைத்தனர். அதற்கு மணப்பெண் சம்மதித்தார். ஆனால், மாப்பிள்ளை தனக்கு நடனமாட விருப்பமில்லை எனக்கூறி பிடிவாதமாக இருந்தார். மணப்பெண்ணும் நடனமாடக்கூடாது என்று கூறி கோபமாக மணப்பெண்ணைக் கடிந்துகொண்டார்.

மணமகளின் தந்தை அச்சம்

மணமகளின் தந்தைக்கு மாப்பிள்ளை இப்படிக் கோபப்படுவது பிடிக்கவில்லை. திருமணத்திற்கு முன்பே இப்படி இருந்தால், திருமணத்திற்குப் பிறகு எப்படி இருப்பாரோ? என்று அச்சமடைந்தார்.

அவர் உடனடியாகத் தன் மகளை வாகனத்திலிருந்து இறக்கிவிட்டார். திருமணம் வேண்டாம், திருமணம் வேண்டாம் என்று கூறிவிட்டு, அனைவரும் ஒன்றாக வீட்டிற்குச் சென்றனர். இதனால் இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியாக திருமணம் நிறுத்தப்பட்டது.

ஏற்கெனவே பெருமளவில் செலவு செய்திருந்த மணமகன் தரப்பினர் தங்களுக்கு மகிழ்ச்சியில்லை என புலம்பியபடி சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com