

நவிமும்பை:
நவிமும்பை கோபர்கைரானே பகுதியை சேர்ந்த 70 வயது முதியவருக்கு, அண்மையில் வீடியோ கால் அழைப்பு ஒன்று வந்தது. இதில் எதிர்முனையில் தோன்றிய நபர், தன்னை சி.பி.ஐ. அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்டார்.
பின்னர் அவர், உங்கள் பெயரில் விமானத்தில் வந்த பார்சல் ஒன்று எங்களிடம் சிக்கியுள்ளது. அதில், தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள், 8 பாஸ்போர்ட்டுகள், மடிக்கணினி ஆகியவை உள்ளது. இதனால் உங்களை டிஜிட்டல் கைது செய்யப் போகிறோம் என மிரட்டினார்.
மேலும் இதில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றால் உடனடியாக ரூ.12½ லட்சத்தை அனுப்பி வைக்கவேண்டும் என கூறி ஒரு வங்கிக்கணக்கு எண்ணை தெரிவித்தார்.
இதனால் பயந்து போன முதியவர் அவர் தெரிவித்த வங்கி கணக்கிற்கு ரூ.12 லட்சத்து 50 ஆயிரத்தை அனுப்பி உள்ளார். இதன் பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முதியவர் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் பணம் பறித்த மர்ம நபர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை வலைவீசி தேடிவருகின்றனர்.