என் மலர்
இந்தியா

திருப்பதியில் குவிந்த பக்தர்கள்: 30 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
- திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு குடிநீர், மோர் டீ காபி உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.
- திருப்பதியில் நேற்று 92,216 பேர் தரிசனம் செய்தனர்.
திருப்பதி:
திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக வாரத்தின் இறுதி விடுமுறை நாட்களில் பக்தர்கள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர். தற்போது பள்ளி கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் வார இறுதி விடுமுறை நாட்களில் கட்டுக்கடங்காத அளவு பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர்.
நேற்று காலை முதல் அதிக அளவு பக்தர்கள் தரிசனத்திற்கு வந்ததால் சீலா தோரணம் வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் காத்திருந்தனர். நேற்று திருப்பதியில் கடுமையான வெயில் கொளுத்தியதால் வரிசையில் காத்திருந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடும் அவதிக்கு உள்ளாகினர். திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு குடிநீர், மோர் டீ காபி உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.
நேற்று மாலை முதல் பக்தர்களின் வருகை 2 மடங்காக அதிகரித்து வருகிறது. இதனால் திருப்பதி மலை முழுவதும் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக காணப்படுகிறது.
திருப்பதியில் நேற்று 92,216 பேர் தரிசனம் செய்தனர். 43,346 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.11 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.






