

மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீதான நீதிமன்ற நடவடிக்கைகளின் அங்கீகரிக்கப்படாத பதிவுகளை, சமூக ஊடகங்களிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு டெல்லி உயர் நீதிமன்ற நிர்வாகம் காவல்துறையிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், அந்த பதிவுகளை பகிர்ந்த கட்சி தலைவர்கள் மீது நடவடிக்கை கோரும் ஒரு புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.
மதுபானக் கொள்கை வழக்கில், நீதிபதி ஸ்வரண காந்த சர்மா முன்னிலையில் கெஜ்ரிவால் வாதாடுவதை காட்டும் காணொளிகளை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்குமாறு டெல்லி காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற நடவடிக்கைகளை அனுமதியின்றி பதிவு செய்வது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட உயர் நீதிமன்றத்தின் மூத்த அதிகாரி ஒருவர், இந்த முடிவை உறுதிப்படுத்தினார்.
காணொளி வாயிலாக நடைபெறும் விசாரணைகள் குறித்த டெல்லி உயர் நீதிமன்றத்தின் விதிகளின்படி, அத்தகைய காணொளிகளை பதிவு செய்வதோ அல்லது பகிர்வதோ அனுமதிக்கப்படுவதில்லை.
சமூக வலைத்தளங்கள் முழுவதும் அத்தகைய பதிவுகளை பதிவு செய்து பரப்பிய தனிநபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இது போன்ற வழக்குகளில் கடந்த காலங்களிலும் இதேபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையில், 2026 ஏப்ரல் 13 அன்று நடைபெற்ற விசாரணை நடவடிக்கைகளை அங்கீகரிக்கப்படாத வகையில் பதிவு செய்து பரப்பியதாக குற்றம்சாட்டி, உயர் நீதிமன்றத்தின் பதிவாளரிடம் ஒரு புகார் மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.