

டெல்லியில் உள்ள கிடங்குகளில் இருந்து நேரடியாக எல்.பி.ஜி. சிலிண்டர்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. நகரம் முழுவதும் அமலாக்கம் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் (OMC-கள்), சேமிப்பு கிடங்குகளில் இருந்து சிலிண்டர்களை விற்பனை செய்வது சட்டவிரோதமானது என்பதை தெளிவுபடுத்தி, விநியோகஸ்தர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளன.
முறையற்ற விற்பனை, பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தை ஆகியவற்றை கட்டுப்படுத்துவதையும், நுகர்வோரை அதிகாரப்பூர்வ முன்பதிவு மற்றும் விநியோக முறையை நோக்கி திருப்புவதையும் இந்த நடவடிக்கை நோக்கமாக கொண்டுள்ளது.
சிலிண்டர்களை பெறுவதற்காக எரிவாயு முகமைகள் அல்லது சேமிப்பு கிடங்குகளுக்கு செல்ல வேண்டாம் என குடியிருப்பு வாசிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விநியோகத்தை நெறிப்படுத்தவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் ஒரு பகுதியாக, முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து எல்.பி.ஜி. சிலிண்டர்களும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நேரடியாக வீடுகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதே நேரத்தில், சிறிய 5-கிலோ எல்.பி.ஜி. சிலிண்டர்கள் பரவலாக கிடைக்க செய்யப்பட்டுள்ளன. செல்லுபடியாகும் அடையாள அட்டையை பயன்படுத்தி, முகவரி சான்று தேவையின்றி எரிவாயு முகமைகளில் இருந்து இவற்றை இப்போது வாங்கலாம். இந்த நடவடிக்கை, புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் நிரந்தர ஆவணங்கள் இல்லாதவர்களுக்கும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.