என் மலர்
இந்தியா

VIDEO: மாமா... அப்பா... அத்தை... என பேசும் காகம்
- சுமார் 15 நாட்களில் அந்த காகம் குணமடைந்து பறக்க தொடங்கியது.
- காகம் வேறு எங்கும் செல்லாமல் தனுஜா முக்னே வீட்டையே சுற்றி சுற்றி பறந்து வந்தது.
பால்கர்:
மகாராஷ்டிர மாநிலம், பால்கர் மாவட்டம் வாடா தாலுகா கா்காவ் கிராமத்தை சேர்ந்த பெண் தனுஜா முக்னே. இவர் தனது தோட்டத்திற்கு சென்றபோது காகம் ஒன்று காயமடைந்து கிடந்ததை கண்டு இரக்கம் கொண்டார். அதனை மீட்டு வீட்டுக்கு கொண்டு வந்து சிகிச்சை அளித்து வந்தார். சுமார் 15 நாட்களில் அந்த காகம் குணமடைந்து பறக்க தொடங்கியது. ஆனால் அந்த காகம் வேறு எங்கும் செல்லாமல் தனுஜா முக்னே வீட்டையே சுற்றி சுற்றி பறந்து வந்தது. சில வேளைகளில் காகம் தனுஜா முக்னேவின் மடியில் அமர்ந்து விடுமாம். அவர் பாசத்தோடு காகத்துக்கு உணவு ஊட்டி விடுகிறார்.
இந்தநிலையில் திடீர் அதிசயமாக அவரது வீட்டில் பேசும் பேச்சுவழக்கை காகம் அறிந்து காகா (மாமா), பாபா (தந்தை) மம்மி (தாய்) உள்ளிட்ட சில வார்த்தைகளை தனது கரையும் குரலில் பேசி வருகிறது.
இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு வலு சேர்க்கும் வகையில் யூ-டியூப் சேனலில் மனித குரலில் பேசும் காகத்தின் வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது.
இதுபற்றி நெட்டிசன்கள், 'இயற்கையின் அதிசயம்', 'புத்திசாலி மிகுந்த காகம்' என பாராட்டி வருகின்றனர். வழக்கமாக கிளிகள் தான் மனிதனை போன்று பேசும் திறனுக்கு பெயர் பெற்றவை. ஆனால் இந்த காகம் பேசுவதை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்த்து வியந்து வருகின்றனர்.






