

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் மவுஜிபூர் அருகே டெல்லி - மும்பை விரைவு சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
வைஷ்ணோ தேவி யாத்திரை சென்று நேற்று இரவு மத்திய பிரதேசத்தின் சியோபூர் மாவட்டத்தை சேர்ந்த சிலர் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது விரைவு சாலையில் சென்றுகொண்டிருந்த அவர்களின் CNG இயற்கை எரிவாயு கார், சார்ட் சர்கியூட் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் 15 நிமிடங்களில் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
ஆனால் அதற்குள் வாகனம் முழுவதுமாக தீப்பற்றி எரிந்து உள்ளிருந்த ஒரு சிறுமி உட்பட 5 பேரும் உடல்கருகி உயிரிழந்தனர் என இன்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
அந்த காரை ஓட்டி வந்த அதன் உரிமையாளரான வினோத் குமார் மட்டும் 80 சதவீத தீக்காயங்களுடன் வாகனத்தில் இருந்து கீழே குதித்து தப்பித்தார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தீ வேகமாக பரவியதால் மற்ற ஐவரும் தப்பிக்க நேரமில்லை. அவர்களின் எலும்புகள் மட்டுமே வாகனத்தில் இருந்து மீட்கப்பட்டு அடையாளம் காண்பதற்காக டிஎன்ஏ ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.