என் மலர்
இந்தியா

புதுச்சேரியில் 5,8-ம் வகுப்பு கட்டாய தேர்ச்சி முறை ரத்து: கல்வித்துறை அமைச்சர் தகவல்
- அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் உயரும்.
- தனியார் பள்ளிகள் நிச்சயமாக கல்வித் துறை உத்தரவை பின்பற்ற வேண்டும்.
புதுச்சேரி:
மத்திய அரசு 5, 8-ம் வகுப்பில் அனைத்து மாணவர்களும் கட்டாய தேர்ச்சி என்ற முறையை ரத்து செய்துள்ளது.
குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்த முடிவை அரசு எடுத்துள்ளது. மத்திய அரசு பள்ளிகளான கேந்திர வித்யாலயா, நவோதயா, சைனிக் பள்ளிகளில் கட்டாய தேர்ச்சி முறை ரத்தாகியுள்ளது.
புதுச்சேரியிலுள்ள பிராந்தியங்களான புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாமில் நடப்பு கல்வி ஆண்டு முதல் அனைத்து வகுப்புகளில் மத்திய பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமலாகியுள்ளது. முதல்முறையாக சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் பொதுத்தேர்வுகளையும் புதுவை மாணவர்கள் எழுத உள்ளனர்.
இந்த நிலையில் கட்டாய தேர்ச்சி ரத்து குறித்து முதலமைச்சர் ரங்கசாமியுடன் கலந்து ஆலோசித்தார். இதயைடுத்து கல்வி அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:-
புதுச்சேரி மத்திய அரசின் கல்வித்திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் உத்தரவை புதுச்சேரி அரசு ஏற்று செயல்படும். இதன் மூலம் அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் உயரும். அதன் அடிப்படையில் தான் மத்திய அரசு திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
தனியார் பள்ளிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். தனியார் பள்ளிகள் நிச்சயமாக கல்வித் துறை உத்தரவை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு நமச்சிவாயம் கூறினார்.






