CJP: உருவானது 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி'.. 40,000 உறுப்பினர்கள் இணைவு - மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட தலைவர்கள் சேர ஆர்வம்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி கொள்கை, "மதச்சார்பற்ற - சோசலிச - ஜனநாயக - சோம்பேறி" என்பதாகும்.
CJP: உருவானது 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி'.. 40,000 உறுப்பினர்கள் இணைவு - மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட தலைவர்கள் சேர ஆர்வம்!
Published on

இந்தியாவில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) என்ற புதிய அரசியல் கட்சி உருவாகியுள்ளது. உருவான சில தினங்களில் இக்கட்சியில் 40,000 பேர் உறுப்பினர்களாக தங்களை இணைத்துக்கொண்டனர்.

இக்கட்சியின் எக்ஸ் பக்கத்தை 15,000க்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர். மேலும் இக்கட்சியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களாக மஹுவா மொய்த்ரா, கீர்த்தி ஆசாத் உள்ளிட்டோர் தங்களை இணைத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இளைஞர்களால் இளைஞர்களுக்காக உருவாக்கப்பட்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சி கொள்கை, "மதச்சார்பற்ற - சோசலிச - ஜனநாயக - சோம்பேறி" என்பதாகும்.

திடீரென இப்படியொரு கட்சி உருவான முழுமுதற் காரணம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் ஆவார்.

கடந்த வாரம் வழக்கறிஞர் தனது 'சீனியர் அட்வகேட்' அந்தஸ்து கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சூர்யகாந்த், " சில வேலையற்ற இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கரப்பான்பூச்சிகள் போலவும் ஒட்டுண்ணிகள் போலவும் சமூக ஊடக செயல்பாட்டாளர்கள் என்ற போர்வையில் அமைப்பை சீகுலைக்க தொடங்குகின்றனர். நீதித்துறை, ஊடகம் என பல துறைகளில் இவர்கள் ஊடுருவகின்றனர்" என பேசியிருந்தார்.

மனுத்தாக்கல் செய்த வக்கீல், தனக்கு 'சீனியர் அட்வகேட்' அந்தஸ்து கிடைக்க சமூக வலைத்தளங்கள் மூலம் அழுத்தம் தந்ததை அடுத்து அவரின் இந்த விமர்சனம் அமைந்தது. ஆனால் நாட்டில் உள்ள வேலையில்லா இளைஞர்களை ஒட்டுமொத்தமாக சூர்யகாந்த் விமர்சித்ததாக சர்ச்சை எழுந்தது.

இதற்கு மற்றொரு சந்தர்ப்பத்தில் விளக்கம் அளித்த அவர், தான் நாட்டின் இளைஞர்களை கரப்பான் பூச்சிகள் என்று அழைக்கவில்லை எனவும் போலி சான்றிதழ்களை பயன்படுத்தி பல்வேறு துறைகளில் ஊடுருவும் சிலரையே குறிப்பிட்டதாகவும் தெரிவித்தார்.

நாட்டில் ஒரு புறம் இளைஞர்கள் வேலையின்மை அதிகரித்து வருகிறது. மறுபுறம் நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வு வினாத்தாள்கள் கசிந்து இளம் தலைமுறையினரின் நம்பிக்கையை உடைத்து வருகின்றன.

இந்த சூழலில் தான் விளையாட்டாக 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' ஜனதா கட்சி உருவாக்கப்பட்டுள்ளது. அபிஜித் தீப்கே என்பவர் இந்த கட்சியை தொடங்கி உள்ளார். இவர் 2020 டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் சமூக ஊடக பிரிவில் வேலை செய்தவர் என்று கூறப்படுகிறது.

இது பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி கிடையாது. முற்றிலும் கேளிக்கையாக உருவான கட்சி. மஹுவா மொய்த்ரா, கீர்த்தி ஆசாத் உள்ளிட்டோரும் விளையாட்டாகவே இதில் இணைய எக்ஸ்-இல் விருப்பம் தெரிவித்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com