முதல் கட்ட தேர்தல் - தயார் நிலையில் சத்தீஸ்கர்

சத்தீஸ்கரில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதுநக்சலைட்டுகள் மற்றும் மாவோயிஸ்ட்கள் அச்சுறுத்தல் அதிகம் உள்ளது
முதல் கட்ட தேர்தல் - தயார் நிலையில் சத்தீஸ்கர்
Published on

இந்திய பாராளுமன்றத்தின் 543 இடங்களுக்கு அடுத்த வருடம் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் இம்மாதம் பல்வேறு தேதிகளில் தேர்தல்கள் நடைபெற உள்ளது. இந்த 5 மாநில தேர்தல்களுக்கும் டிசம்பர் 3 அன்று முடிவுகள் அறிவிக்கப்படும்.

மத்திய இந்தியாவில் உள்ள அதிகளவு வனப்பிரதேசங்களை கொண்ட மாநிலமான சத்தீஸ்கரில் இரண்டு கட்டமாக தேர்தல்கள் நடத்தப்பட உள்ளது. அம்மாநில சட்டசபையில் மொத்தம் 90 இடங்கள் உள்ளன.

நாளை அங்கு 20 இடங்களுக்கு முதற்கட்ட தேர்தலும், மீதமுள்ள 70 இடங்களுக்கு வரும் 17-ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலும் நடைபெறவுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் ஏற்கெனவே அங்கு அமலில் உள்ளது.

அம்மாநில பஸ்டார் (Bastar) பகுதியில் 12 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மாவோயிஸ்ட்கள் மற்றும் நக்சலைட்டுகளின் அச்சுறுத்தல் பெருமளவு உள்ள பகுதி என்பதால் சுமார் 60 ஆயிரம் சீருடை பணியாளர்களை காவலுக்கு தேர்தல் ஆணையம் பணியில் அமர்த்தி உள்ளது. இவர்களில் 40 ஆயிரம் மத்திய ஆயுத காவல் படையினர் (CAPF) மற்றும் 20 ஆயிரம் மாநில காவல்துறையினர் அடங்குவர். இப்பணியில் பெண் கமாண்டோ படையினரும், நக்சலைட்டு எதிர்ப்பு பிரிவு வீரர்களும் அடங்குவர்.

மொத்தம் 5304 வாக்குச்சாவடிகள் நாளைய தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பாதுகாப்பு காரணங்களுக்காக 149 வாக்குச்சாவடிகள் காவல் நிலையங்களுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளன.

முதற்கட்ட தேர்தலில் 223 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 25 பேர் பெண்கள்.

சுமார் 40,78,681 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் 19,93,937 பேர் ஆண்கள், 20,84,675 பேர் பெண்கள் மற்றும் 69 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள்.

கடந்த 2018 சட்டசபை தேர்தலில் 68 இடங்களை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும், 15 இடங்களை பாரதிய ஜனதா கட்சியும் பெற்றன. தற்போதைய தேர்தலில் ஆட்சியை தக்க வைத்து கொள்ள காங்கிரஸ் கட்சியும், ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க.வும் மும்முரமாக போராடி வருகின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com