சரக்கு ரெயிலின் சக்கரங்களுக்கு இடையே அமர்ந்து 100 கிலோ மீட்டர் பயணம் செய்த சிறுவன்

திடீரென ரெயில் நகரத் தொடங்கியதால் அதிர்ச்சி அடைந்த சிறுவன் இறங்க முடியாமல் தவித்துள்ளான். சிறுவனை மீட்டு குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைத்த போலீசார், அச்சிறுவனை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்தனர்.
சரக்கு ரெயிலின் சக்கரங்களுக்கு இடையே அமர்ந்து 100 கிலோ மீட்டர் பயணம் செய்த சிறுவன்
Published on

உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோ ஆலம்நகர் பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒளிந்து பிடித்து விளையாடி கொண்டிருந்தான். அப்போது யார் கண்ணிலும் சிக்காமல் இருப்பதற்காக முடிவு செய்த சிறுவன் அங்கு தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரெயில் மீது ஏறி ஒளிந்துள்ளான். ஆனால் திடீரென ரெயில் நகரத் தொடங்கியதால் அதிர்ச்சி அடைந்த சிறுவன் இறங்க முடியாமல் தவித்துள்ளான்.

பின்னர் ரெயிலின் சக்கரங்களுக்கு இடையே அமர்ந்து அழுதுகொண்டே பயணித்துள்ளான். அந்த ரெயில் ஹர்டோய் ரெயில் நிலையத்தை அடைந்த போது அங்கு வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ரெயில்வே பாதுகாப்பு படையினர் சக்கரங்களுக்கு இடையே சிறுவன் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அந்த சிறுவனை பத்திரமாக மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அந்த சிறுவன் லக்னோவின் ராஜாஜிபுரத்தில் உள்ள பாலாஜி மந்திர் பகுதியை சேர்ந்த அஜய் என்பதும், ரெயில் சக்கரங்களுக்கிடையே அமர்ந்து சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ததும் தெரிய வந்தது. அந்த சிறுவனை மீட்டு குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைத்த போலீசார், அச்சிறுவனை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com