என் மலர்
இந்தியா

எல்லை பதற்றம்: பஞ்சாபில் பொதுமக்கள் ஒன்று கூட தடை - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
- பூஞ்ச் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் தினேஷ் குமார் என்ற ராணுவ வீரர் வீர மரணமடைந்தார்.
- பஞ்சாப் மாநிலத்தில் காவல்துறையினர் வார விடுமுறை, விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் 22-ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் அமைப்பு பொறுப்பேற்றது.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை வான்வழி தாக்குதலாக மத்திய அரசு நேற்று முன்தினம் தொடங்கியது.
நள்ளிரவு 1 மணிக்குப்பின் இந்தியாவின் போர் விமானங்கள் பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலும் உள்ள பயங்கரவாத கட்டமைப்புகளை ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்கி அழித்தன.
பாகிஸ்தானில் 4 இடங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 5 இடங்கள் என மொத்தம் 9 இடங்களில் பயங்கரவாதிகள் உள்ள அலுவலகங்கள், பயிற்சி முகாம்கள், அவர்களது வசிப்பிடங்கள் என 21 பயங்கரவாத நிலைகளை தரைமட்டமாக்கின.
இதையடுத்து எல்லையில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் தினேஷ் குமார் என்ற ராணுவ வீரர் வீர மரணமடைந்தார். எல்லைப் பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி வரும் நிலையில் இந்தியாவில் முப்படைகளும் தயார் நிலையில் உள்ளன.
இந்த நிலையில், எல்லையை ஒட்டிய பகுதிகளில் பதற்றம் நிலவுவதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பஞ்சாப் மாநிலம் முழுவதும் பொதுமக்கள் ஒன்று கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை பொது இடங்களில் கூட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூரை அடுத்து எல்லைப்பகுதி மாநிலங்களில் பதற்றம் நிலவுவதால் பஞ்சாபின் எல்லையோர மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லையோரம் உள்ள 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மறு அறிவிப்பு வரும் வரை பஞ்சாப் மாநிலத்தில் காவல்துறையினர் வார விடுமுறை, விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.






