விமானங்களை தொடர்ந்து தாஜ் மஹாலுக்கும் வெடிகுண்டு மிரட்டல் - பரபரப்பு

வெடிகுண்டு மிரட்டல்களால் தேவையற்ற அச்ச உணர்வு ஏற்படுகிறது. சுற்றுலாத் துறை அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல்.
விமானங்களை தொடர்ந்து தாஜ் மஹாலுக்கும் வெடிகுண்டு மிரட்டல் - பரபரப்பு
Published on

இந்தியாவில் சமீப காலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது, விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது அடிக்கடி நடைபெற்று வருகிறது. வெடிகுண்டு மிரட்டல்களால் வீண் பதற்றம் மற்றும் நேர விரயம், தேவையற்ற அச்ச உணர்வு ஏற்படுகிறது.

இந்த வரிசையில், தற்போது உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருக்கிறது. உத்தர பிரதேச மாநிலத்தின் ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ் மஹால் உலக அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.

தாஜ் மஹால் அழகை பார்த்து ரசிக்க இந்தியா மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், தாஜ் மஹாலை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக உத்தரபிரதேச மாநிலத்தின் சுற்றுலாத் துறை அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்தது.

இதைத் தொடர்ந்து தாஜ் மஹால் நுழைவு வாயில் மூடப்பட்டு சுற்றுலாப் பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார் மோப்ப நாய் உதவியுடன் அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தினர்.

சோதனை முடிவில், வெடி குண்டுகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி தான் என்று தெரியவந்தது. மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com