

உணவு பொருட்களில் கலப்படம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாலும் சிலர் அதை கண்டுகொள்வது கிடையாது. இந்நிலையில், பீகார் மாநிலம் கட்டிகார் ரெயில் நிலையத்தில், வெள்ளரிக்காய்களுக்குச் செயற்கையான பச்சை நிறத்தைப் பூசி பயணிகளுக்கு விற்பனை செய்வது போன்ற ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த ரெயில் நிலையத்தின் 7-வது மற்றும் 8-வது நடைமேடைகளில் அந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இதில், 2 பெண் வியாபாரிகள் வெள்ளரிக்காய்கள் பசுமையாக தெரிவதற்காக அதன் மீது ஒரு ரசாயன பொருளை பூசும் காட்சிகள் உள்ளது.
வீடியோவை பார்த்த ரெயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தினர். தொடர்ந்து, ரெயில் நிலையத்தில் அதிரடி சோதனை நடத்தி வெள்ளரிக்காய் கூடைகள் பறிமுதல் செய்ததோடு, வீடியோவில் இருந்த பெண் உட்பட மொத்தம் 9 பெண் வியாபாரிகளை கைது செய்தனர்.
இதற்கிடையே, வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், ரெயில் நிலையங்களில் விற்கப்படும் உணவுகளின் தரம் மற்றும் சுகாதாரம் குறித்து தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். பயணிகளின் உயிருடன் விளையாடும் இது போன்ற செயல்களை தடுக்க, ரெயில்வே நிர்வாகம் அனைத்து நிலையங்களிலும் முறையான உணவு பாதுகாப்பு சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என பயனர்கள் பலரும் பதிவிட்டனர்.