இந்தியாவின் E20 எத்தனால் பெட்ரோல் சலுகையை நிராகரித்தது பூட்டான்: வழக்கம் போல சாதாரண பெட்ரோல் வழங்க கோரிக்கை!

எத்தனால் கலந்த எரிபொருள் காற்றில் உள்ள ஈரப்பதத்தை எளிதில் உறிஞ்சும் தன்மை கொண்டது.
Bhutan Rejects India's E20 Ethanol Petrol Offer
Published on

இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வழங்கிய E20 (20 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்ட) பெட்ரோல் விநியோக சலுகையை அண்டை நாடான பூட்டான் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

இந்தியாவில் தற்போது E20 பெட்ரோல் கட்டாயமாக்கப்பட்டு வருவதும், அது வாகனங்களின் செயல்திறன் மற்றும் மைலேஜை பாதிப்பதாக நாடு முழுவதும் பரவலான விவாதங்களும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ள நிலையில், பூட்டானின் இந்த அதிரடி முடிவு சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.

இந்திய சந்தையில் சாதாரண பெட்ரோல் கிடைக்கும் வரை, தங்களுடைய நாட்டிற்கு அதையே தொடர்ந்து விநியோகம் செய்ய வேண்டும் என்று பூட்டான் அரசு இந்தியாவிடம் அதிகாரப்பூர்வமாகக் கேட்டுக்கொண்டுள்ளது.

தூய்மையான எரிபொருளை பூட்டான் எதிர்க்கவில்லை என்றாலும், அதன் புவியியல் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பக் குறைபாடுகள் காரணமாகவே இந்த சலுகை நிராகரிக்கப்பட்டுள்ளது. எத்தனால் கலந்த எரிபொருள் காற்றில் உள்ள ஈரப்பதத்தை எளிதில் உறிஞ்சும் தன்மை கொண்டது.

பூட்டான் போன்ற மலைப்பாங்கான மற்றும் செங்குத்தான நிலப்பரப்பில் அமைந்துள்ள பழைய எரிபொருள் சேமிப்பு கிடங்குகளில் ஈரப்பதம் கசிவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், எரிபொருளின் தரம் பாதிக்கப்பட்டு வாகனங்களின் என்ஜின்கள் பழுதடையும் அபாயம் உள்ளது.

மேலும், செங்குத்தான மலைப்பாதைகளில் வாகனங்களை இயக்குவதற்கு அதிக என்ஜின் வேகம் தேவைப்படும் நிலையில், எத்தனால் கலந்த பெட்ரோல் அதற்கு உகந்ததாக இருக்காது என பூட்டான் அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

இவற்றுடன், E20 எரிபொருளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்படாத பழைய வாகனங்களை வைத்துள்ள பூட்டான் நாட்டு மக்களுக்கு, இந்த எரிபொருளால் என்ஜின் பழுது மற்றும் கூடுதல் பராமரிப்புச் செலவாக ஆண்டுக்கு 5,000 முதல் 10,000 ரூபாய் வரை கூடுதல் சுமை ஏற்படும் என அந்நாட்டு பணிமனை ஆய்வுகள் எச்சரித்துள்ளன.

பிரேசில் போன்ற நாடுகளில் எத்தனால் கலந்த எரிபொருட்களுக்கு மானியம் வழங்கப்பட்டு குறைந்த விலைக்கு விற்கப்படும் நிலையில், இந்தியாவில் இது சாதாரண பெட்ரோல் விலையிலேயே விற்கப்படுவதால் மைலேஜ் குறைவு மற்றும் கூடுதல் பராமரிப்புச் செலவை நுகர்வோரே ஏற்க வேண்டியுள்ளது.

இந்த உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரக் காரணங்களை முன்வைத்தே, பூட்டான் அரசு தற்போதைக்கு E20 பெட்ரோல் வேண்டாம் என்ற இறுதி முடிவை எடுத்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com