கட்டுப்பாடுகளை தளர்த்தியது மேற்கு வங்காளம்... 3ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறப்பு

பிரிட்டனில் இருந்து வரும் பயணிகள் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்து கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழ் கொண்டு வரவேண்டும்.
பள்ளிக்கு வரும் மாணவர்கள் (கோப்பு படம்)
பள்ளிக்கு வரும் மாணவர்கள் (கோப்பு படம்)
Published on

கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது:-

மேற்கு வங்காளத்தில் பிப்ரவரி 3ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்படும். 8 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டுமே பள்ளிகள் திறக்கப்படும். கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பாலிடெக்னிக், ஐடிஐக்களும் அதே நாளில் நேரடி வகுப்புகளை மீண்டும் தொடங்கும். ஆரம்பப் பள்ளிகளை இப்போது திறக்கவில்லை.

டெல்லி, மும்பையில் இருந்து வாரத்தில் மூன்று நாட்கள் விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில், இனி தினசரி விமானங்களை இயக்க அனுமதிக்கப்படுகிறது. பிரிட்டனில் இருந்து இயக்கப்படும் விமானங்களுக்கான தடையும் நீக்கப்படுகிறது. ஆனால், பயணிகள் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்து கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழ் கொண்டு வரவேண்டும்.

பணியிடங்களில் 75 சதவீதம் வரை பணியாளர்கள் பணி செய்யலாம். இரவுநேர ஊரடங்கு கட்டுப்பாட்டில் ஒருமணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். சினிமா தியேட்டர்கள், அரங்கங்களில் 75 சதவீதம் வரை பார்வையாளர்களை அனுமதிக்கலாம். தற்போதுள்ள கட்டுப்பாடுகள் பிப்ரவரி 15ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பள்ளி, கல்லூரிகளை திறக்க வேண்டும் என வலியுறுத்திய மாணவர் சங்கங்கள், அரசின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளன. அதேசமயம், இந்த முடிவானது அழுத்தம் காரணமாக எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com