

உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவின் பிறந்தநாள் இன்று வாரணாசியில் அக்கட்சியின் தொண்டர்களால் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வில் அகிலேஷ் யாதவை கிருஷ்ணராக சித்தரித்து ஹோமம் உள்ளிட்ட இந்து மத சடங்குகள் நடத்தப்பட்டது.
இந்நிலையில் சமாஜ்வாடி கட்சி இந்து மத உணர்வுகளை கேலி செய்வதகாக குற்றம்சாட்டி பாரதிய ஜனதா கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
இதுகுறித்து பாஜக செய்தி தொடர்பாளர் பிரதீப் பண்டாரி எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள செய்தியில், “சமாஜ்வாடி கட்சி மீண்டும் இந்துக்களை அவமானப்படுத்துகிறது.
அகிலேஷ் யாதவை பகவான் கிருஷ்ணராக சித்தரித்து சமாஜ்வாதி கட்சி இந்துக்களை கேலி செய்கிறது. கிருஷ்ண ஜென்மபூமி அன்று மதுராவில் ஒரு பிரமாண்டமான கோவில் கட்டுவதை அகிலேஷ் யாதவும் சமாஜ்வாதி கட்சியும் வெளிப்படையாக ஏற்றுக்கொள்வார்களா?
இந்த கால் நேமிகளுக்கு(அரக்கர்களுக்கு) இந்துக்கள் பதிலடி கொடுப்பார்கள்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து மேலும் கூறிய அவர், “அகிலேஷ் யாதவ் ஆட்சிக்கு வந்தால், அயோத்தியை ஒரு புனித நகரமாக மாற்றுவதாக கூறியிருந்தார்.
நீங்கள் எத்தகைய ஒரு புனித நகரத்தை உருவாக்குவீர்கள்? ராமர் பக்தர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது உங்கள் சமாஜ்வாடி அரசு.
முஸ்லிம் மற்றும் மெளல்விகளுக்கு முன்னால் மண்டியிடுவதை தவிர, மாநிலத்தின் வளர்ச்சிக்காகவோ அல்லது அயோத்யா, மதுரா, காசி ஆகியவற்றின் அடையாளத்தை பாதுகாப்பதற்காகவோ உங்களிடம் வேறு எந்த திட்டமும் இல்லை” என்றும் அவர் கூறினார்.