

ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கேம்ப்பெல் வில்சன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கேம்ப்பெல் வில்சன் ஐந்து ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார். ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரியாக அவரது பதவிக்காலம் ஜூலை 2027-இல் நிறைவடைய திட்டமிடப்பட்டிருந்தது.
கடந்த 2022-ஆம் ஆண்டில், ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் (CEO) மற்றும் நிர்வாக இயக்குநராகவும் (MD) கேம்ப்பெல் வில்சன் நியமிக்கப்பட்டார். விமான போக்குவரத்து துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலான செழுமையான அனுபவம் கொண்ட இவர், முழு சேவை விமான நிறுவனங்கள் மற்றும் குறைந்த கட்டண விமான நிறுவனங்கள் என இரண்டிலும் பணியாற்றியுள்ளார்.
ஏர் இந்தியாவில் இணைவதற்கு முன்பு, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) நிறுவனத்தின் கீழ் இயங்கும் குறைந்த கட்டண துணை நிறுவனமான `ஸ்கூட்' (Scoot)-இன் தலைமை நிர்வாக அதிகாரியாக வில்சன் பணியாற்றினார்.
1996-ஆம் ஆண்டில் நியூசிலாந்தில், SIA நிறுவனத்தில் ஒரு மேலாண்மை பயிற்சியாளராக அவர் தனது தொழில் வாழ்க்கையை தொடங்கினார். அதை தொடர்ந்து கனடா, ஹாங்காங் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் SIA-வின் பல்வேறு பொறுப்புகளை அவர் வகித்தார்; பின்னர் 2011-இல் சிங்கப்பூருக்குத் திரும்பி, 'ஸ்கூட்' நிறுவனத்தின் நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றார்.
அப்பதவியை அவர் 2016-ஆம் ஆண்டு வரை வகித்தார். அதன் பிறகு, SIA நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் மூத்த துணைத் தலைவராகப் (Senior Vice President) பணியாற்றிய அவர், விலை நிர்ணயம், விநியோகம், மின்னணு வர்த்தகம் (eCommerce), விற்பனைப் பொருட்கள் மேலாண்மை, பிராண்ட் மற்றும் சந்தைப்படுத்தல், உலகளாவிய விற்பனை மற்றும் விமான நிறுவனத்தின் வெளிநாட்டு அலுவலகங்கள் ஆகியவற்றை மேற்பார்வையிட்டார்.
ஏப்ரல் 2020-இல், 'ஸ்கூட்' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இரண்டாவது முறையாக அவர் மீண்டும் பொறுப்பேற்றார். நியூசிலாந்தில் உள்ள கேன்டர்பரி பல்கலைக்கழகத்தில், வணிக நிர்வாக துறையில் வணிகவியலில் முதுகலைப் பட்டத்தை வில்சன் பெற்றுள்ளார்.