திருப்பதி உயிரியல் பூங்காவில் விலங்குகளை ரசித்த சிறுவன்- பேட்டரி வாகனம் மோதி பலி

பூங்கா ஊழியர்கள் சிறுவனை ரூயா அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.போலீசார் வழக்கு பதிவு செய்து பேட்டரி வாகன டிரைவரை கைது செய்தனர்.
திருப்பதி உயிரியல் பூங்காவில் விலங்குகளை ரசித்த சிறுவன்- பேட்டரி வாகனம் மோதி பலி
Published on

திருப்பதி:

திருப்பதி அலிப்பிரி வன உயிரியல் பூங்காவில் மான்கள் உள்ளிட்ட விலங்குகள் பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.

திருப்பதி ராயல் நகரை சேர்ந்தவர் சுப்ப ரத்ன சுஷ்மா. இவர் தனது 3 மகன்கள் மற்றும் அவரது சகோதரர் மகனையும் உடன் அழைத்துக் கொண்டு உயிரில் பூங்காவிற்கு சென்றார்.

உயிரில் பூங்காவில் விலங்குகளை சிறுவர்கள் ரசித்தனர். அங்கும் இங்குமாக சந்தோஷமாக ஓடியாடி விளையாடினர். சுப்ப ரத்ன சுஷ்மா அருகில் இருந்து சிறுவர்கள் விளையாடுவதை பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தார்.

சிறுவர்கள் விளையாடி முடிந்ததும் வீட்டிற்கு புறப்பட்டனர். அங்குள்ள உணவகத்தின் வழியாக நடந்து சென்றனர்.

அப்போது சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த பேட்டரி கார் திடீரென சுப்ப ரத்னா சுஷ்மாவின் மகன் பிரணவ் (வயது 3) என்பவர் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதனைக் கண்ட அவரது தாய் கதறி அழுதார். பூங்கா ஊழியர்கள் சிறுவனை ரூயா அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சிறுவனின் தாய் எம்.ஆர்.பள்ளி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பேட்டரி வாகன டிரைவரை கைது செய்தனர்.

சிறுவனின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.

இனி உயிரியல் பூங்காவில் உள்ள பேட்டரி வாகனங்கள் 10 கிலோ மீட்டருக்கு பதிலாக 5 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்படி வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்படும் என ஆந்திர அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com