மின்னல் தாக்கி 7 பேர் உயிரிழப்பு - ஜார்க்கண்டில் சோகம்

44 வயது பெண் உட்பட இருவர் உயிரிழந்தனர்.
மின்னல் தாக்கி 7 பேர் உயிரிழப்பு - ஜார்க்கண்டில் சோகம்
Published on

ஜார்க்கண்ட் மாநிலத்தின் நான்கு மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் இரண்டு பெண்கள் மற்றும் மூன்று சிறுவர்கள் உட்பட குறைந்தது ஏழு பேர் உயிரிழந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

பாலமு, சத்ரா மற்றும் ஜம்தாரா ஆகிய மாவட்டங்களில் தலா இருவர் உயிரிழந்தனர், லோஹர்தகாவில் ஒருவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர்கள் விவரம்:

"கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தின் நான்கு மாவட்டங்களில் மின்னல் தாக்கியதால் இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன," என்று காவல் அதிகாரி ஒருவர் கூறினார்.

பாலமு மாவட்டத்தில், இரண்டு வெவ்வேறு இடங்களில் ஒரு பெண் உட்பட இருவர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் சிந்தா குன்வார் (35) மற்றும் அனேஷ் குமார் (12) என அடையாளம் காணப்பட்டனர்.

"உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மெடினினகர் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. குன்வார் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியது; அதேவேளையில் குமார் மரத்தடியில் ஒதுங்கி இருந்தபோது உயிரிழந்தார்," என்று மெடினினகர் துணைப்பிரிவு மாஜிஸ்திரேட் சஞ்சய் பாண்டே தெரிவித்தார்.

பொறுப்பு அதிகாரி பேட்டி:

சத்ரா மாவட்டத்தில், மயூர்ஹண்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மின்னல் தாக்கியதில் 44 வயது பெண் உட்பட இருவர் உயிரிழந்தனர். உயிரிழந்த ஆண் சக்தேவ் தாக்கூர் (50) என அடையாளம் காணப்பட்டார்.

மயூர்ஹண்ட் காவல் நிலைய பொறுப்பு அதிகாரி ராகுல் துபே பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், அப்பெண் வீட்டின் வெளியே வேலை செய்துகொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதாகவும், அந்த நபர் கால்நடைகளை மேய்த்துக்கொண்டிருந்தபோது உயிரிழந்ததாகவும் தெரிவித்தார்.

லோஹர்தகா மாவட்டத்தின் பாத்ரு கிராமத்தில் மின்னல் தாக்கியதில் 11 வயது சிறுமி உயிரிழந்தார்; 12 வயது சிறுவன் ஒருவன் தீக்காயங்களுக்குள்ளானான்.

"அக்கிராமத்தில் குழந்தைகள் மாம்பழம் பறித்துக்கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்த சிறுமி நீலம் குமாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்," என்று மற்றொரு அதிகாரி தெரிவித்தார்.

ஜம்தாராவின் சாக்தஹா கிராமத்தில் புதன்கிழமை இரவு மின்னல் தாக்கியதில் பதின்ம வயது சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்தனர்; மேலும் இருவர் தீக்காயங்களுக்குள்ளாகினர். உயிரிழந்தவர்கள் விஸ்வேஷ்வர் டுடு (16) மற்றும் பினு ஹான்ஸ்டா (50) என அடையாளம் காணப்பட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com