

மத்திய பிரதேச மாநிலத்தின் தேவாஸ் மாவட்டத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 23 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேவாஸ் கூடுதல் மாவட்ட ஆட்சியர் (ஏடிஎம்) சஞ்சீவ் ஜெயின் பி.டி.ஐ.-யிடம் கூறும் போது, "தேவாஸில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு தொழிலாளர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன்மூலம் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது," என்று தெரிவித்தார்.
வெடி விபத்தைத் தொடர்ந்து டோங்க் கலான் பகுதியில் இயங்கி வரும் பட்டாசு தொழிற்சாலையின் உரிமம் பெற்ற உரிமையாளரான அனில் மால்வியா, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் (என்எஸ்ஏ) கடுமையான பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, மால்வியாவின் பட்டாசு உரிமம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது. தீ விபத்தில் காயமடைந்த மூன்று தொழிலாளர்கள் இந்தூரில் உள்ள அரசு மகாராஜா யஷ்வந்த்ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதலமைச்சர் மோகன் யாதவ், பாதிக்கப்பட்டவர்களின் நலம் குறித்து விசாரிப்பதற்காக மருத்துவமனைக்கு விரைந்தார். பாதிக்கப்பட்டபவர்களை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் (NSA) கீழ் பட்டாசு தொழிற்சாலையின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி வருகிறோம்.
விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வழக்கில் குற்றவாளிகள் எவரையும் அரசு விட்டுவைக்காது. இந்த சம்பவம் ஒரு பாடமாக அமைந்துள்ளது, மேலும் இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாது என நம்புகிறோம்," என்றார்.