ஆந்திராவில் கார் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரர்கள் பலி

விபத்தில் கார் முழுவதும் நொறுங்கியது.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திராவில் கார் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரர்கள் பலி
Published on

திருப்பதி:

ஆந்திர மாநிலம், அன்னமைய்யா மாவட்டம், மதனப்பள்ளியை சேர்ந்தவர்கள் சலபதி (வயது 74), ஜெயச்சந்திரா (72 ), நாகேந்திரா (65). 3 பேரும் உடன் பிறந்த சகோதரர்கள்.

சலபதி, ஜெயச்சந்திரா ஆகியோர் சப்-இன்ஸ்பெக்டர்களாக வேலை செய்து ஓய்வு பெற்றவர்கள். நாகேந்திரா கல்லூரி விரிவுரையாளராக வேலை செய்து ஓய்வு பெற்றவர்.

அனந்தபூரில் உள்ள உறவினர் வீட்டு இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக நெல்லூரை சேர்ந்த வேணுகோபால் என்பவருடன் நேற்று முன்தினம் காரில் சென்றனர்.

இறுதி சடங்கு முடிந்து மீண்டும் சொந்த ஊருக்கு காரில் வந்து கொண்டு இருந்தனர். ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம், நல்ல செருவு அடுத்த பெத்தயலம்பள்ளி அருகே கார் வந்தபோது வளைவில் நின்று கொண்டு இருந்த மினி லாரி மீது கார் மோதியது.

இந்த விபத்தில் கார் முழுவதும் நொறுங்கியது. காரில் இருந்த சலபதி, ஜெயச்சந்திரா, நாகேந்திரா ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கதிரி போலீசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்த வேணுகோபாலை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரர்கள் விபத்தில் பலியான சம்பவம் அவர்களது கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com