

வட இந்தியாவில் கோடைக்காலம் தனது விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக டெல்லி, ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையம் “வெப்ப அலை’ எச்சரிக்கையை விடுத்துள்ளது. இப்போதே நிலைமை இப்படி என்றால், மே மாதம் எப்படி இருக்கும் என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.
தென் மாநிலங்களை விட வட இந்தியாவில் வெயில் அதிகமாக உணரப்படுகிறது. பல பகுதிகளில் வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்சியசுக்கு(104 டிகிரி பாரன்ஹீட்) அதிகமாகவும் சில இடங்களில் 45 டிகிரி செல்சியஸ் (113 டிகிரி பாரன்ஹீட்) அளவிலும் பதிவாகியுள்ளது.
ஒடிசாவில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து ராஜ்கபூர் ஹெம்ப்ராம், அனுராக் எக்கா ஆகிய 2 பள்ளி ஆசிரியர்கள் உயிரிழந்தனர். வெப்பத்தாக்கத்தால் அவர்கள் இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
இவர்கள் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில் இருந்தபோது கடுமையாக வெப்ப அலையால் பாதிக்கப்பட்டு இவர்கள் இறந்ததாக கூறுகின்றனர்.
நாட்டிலேயே அதிக வெப்பம் பதிவான நகரமாக மகாராஷ்டிர மாநிலம் அகோலா நகரம் மாறி உள்ளது. நேற்று இங்கு 46.9 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. அகோலாவுக்கு அடுத்தபடியாக அமராவதியில் 46.8 டிகிரி, வார்தாவில் 46.4 டிகிரி, நாக்பூரில் 45.4 டிகிரி மற்றும் சத்திரபூரில் 45 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது.
நாக்பூர் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்து வரும் நாட்களில் வெப்ப நிலை மேலும் அதிகரிக்கும் என்று எச்சரிக்கை விடுத்து உள்ளது. மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், வெளியில் செல்லும்போது உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.