மணிப்பூரில் பயங்கரவாத தாக்குதல்- 2 பாதுகாப்புப் படை வீரர்கள் பலி

நேற்று நள்ளிரவு தொடங்கி அதிகாலை 2:15 மணி வரை தாக்குதல் நடந்துள்ளது.உயிரிழந்த இருவரும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் சிஆர்பிஎப் 128 பட்டாலியனைச் சேர்ந்தவர்கள்.
மணிப்பூரில் பயங்கரவாத தாக்குதல்- 2 பாதுகாப்புப் படை வீரர்கள் பலி
Published on

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் இரு இன குழுக்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதல் மாநிலம் முழுவதும் கலவரமாக மாறி ஏராளமானோர் உயிரை பறித்தது.

இன்னமும் அந்த கலவரத்தில் இருந்து மணிப்பூர் மாநிலம் விடுபடவில்லை. அடிக்கடி இரு இன மக்களும் மோதலில் ஈடுபடுகிறார்கள்.

இந்த நிலையில் மணிப்பூரில் நேற்று பாராளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்தது. இதற்காக துணைநிலை ராணுவத்தினர் அங்குள்ள வாக்குச்சாவடிகளில் குவிக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் பிஸ்னுபூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட துணைநிலை ராணுவத்தினர் மலையடி வார கிராமத்தில் தங்கியிருந்தனர்.

நரைன்சைனா என்ற கிராமத்தில் துணைநிலை ராணுவத்தினர் ஓய்வு எடுத்து வந்தனர். நேற்று இரவு 12.30 மணியளவில் அந்த முகாம் மீது மணிப்பூர் பயங்கரவாத குழு ஒன்று திடீர் தாக்குதல் நடத்தியது. மலையில் பதுங்கி இருந்தபடி அவர்கள் சரமாரியாக கையெறி குண்டுகளை வீசி தாக்குதல்களை நடத்தினார்கள்.

இதையடுத்து ராணுவ வீரர்களும் பதிலடி தாக்குதலை மேற்கொண்டனர். இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இன்று அதிகாலை 2.30 மணி வரை இந்த தாக்குதல் நீடித்தது.

இதில் ஏராளமான துணைநிலை ராணுவத்தினர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் துணைநிலை ராணுவத்தின் சப்-இன்ஸ்பெக்டர் சர்கார், தலைமை போலீஸ்காரர் அருப்சைனி ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

10-க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீவிரவாதிகளை பிடிக்க அந்த பகுதியில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com